மதுரையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், முகநூல் மூலமாக பெண்களை ஏமாற்றி செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முத்துசங்கு என்ற காவலர், மதுரை ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுபாஷினி என்ற பி.இ. பட்டதாரியான பெண் ஒருவரை இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால் இவர் திருமணம் செய்யும் போது, தான் முன்னாள் அமைச்சரின் அரசு இல்லத்தில் பாதுகாவலராகப் பணிபுரிபவர் என்பதை மறைத்து உதவி ஆய்வாளர் என்று பொய் கூறி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி இது குறித்து வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்நிலையில் எப்போதும் செல்போனும் கையுமாக சுற்றிய முத்துசங்கு, எப்போதும் சாட்டிங் செய்வதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மனைவி அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது பேஸ்புக் மெசஞ்சரில் 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் போலியான ஐடிகளை பயன்படுத்தி ஆபாசமாக பேசியுள்ளதையும், ஆபாசமான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கணவரிடம் கேட்டபோது அவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் கணவனை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்ற சுபாஷினி கணவனின் சாட்டிங் செய்வதை குறித்து தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரிந்ததால் காவலர் முத்துசங்கு மீது அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. கணவரின் பெற்றோரிடம் கூறியபோது அவர்களும் கண்டுகொள்ளாத நிலையில் மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, தான் திருந்தி வாழ்வதாகக் கூறி எழுதி கொடுத்துள்ளார்.
இதனை நம்பி தனது கணவருடன் சென்று சுபாஷினி சேர்ந்து வாழ்ந்த நிலையில், வரதட்சணை குறைவாக கொண்டு வந்ததாக கூறி முத்துசங்கு சண்டையிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தனது கணவர் மீண்டும் செல்போனில் சமூகவலைதளங்களில் பேக் ஐடியில் மூலமாக பல பெண்களுடன் ஆபாசமாக பேசிவந்ததை கண்டுபிடித்த சுபாஷினி அந்த பதிவுகளில் திருமணமான மற்றும் இளம்பெண் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரிடம் தன்னை காவல்துறை உயரதிகாரி என கூறி பழகி தனது கணவர் முத்துசங்கு, அந்த பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்றுகொண்டு அதனைவைத்து மிரட்டி பல்வேறு இடங்களுக்கு அழைத்துசென்று வந்ததை முகநூல் மெசஞ்சர் உரையாடல் மூலம் கண்டுபிடித்துள்ளார்.
அதில் சில பெண்கள் தன்னை விட்டுவிடுமாறு கூறி கேட்டபோது, தன்னுடன் நெருக்கமாக இருந்ததை அவர்களின் கணவரிடம் கூறிவிடுவதாகக் கூறி மிரட்டி பணம் பெற்றுள்ளதையும் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளார்.
இந்த விவரங்களை மதுரை மாநகர காவல் ஆணையரிடம் தனது பெற்றோருடன் வந்து புகார் மனு அளித்தார் சுபாஷினி. தனது கணவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வரதட்சணை கொடுமை செய்ததோடு, பல பெண்களுக்கு சமூகவலைதளங்களில் மூலம் ஏமாற்றி பாலியல் மிரட்டலில் ஈடுபட்டுள்ளதாகவும் தனது வாழ்க்கை போனாலும் பரவாயில்லை தன் கணவரை நம்பி ஏமாந்த இளம்பெண்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டாள்ளார்.