ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே திருமண விருந்தில் மட்டன் இல்லாததால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மணமகன் வீட்டார் மணமகளின் வீட்டிற்கு ஊர்வலமாக வந்தனர்.
திருமணம் நடைபெறும் இடத்தில் மணமகனுக்கும், மணமகனின் உறவினர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் உறவினர்கள் அனைவரும், திருமண விருந்து உண்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் உணவு பரிமாறும்போது, உணவில் மட்டன் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் உணவு பரிமாறியவர்களிடமும், மணப்பெண்ணின் உறவினர்களிடமும் மட்டன் இல்லாதது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் திருமண விருந்தில் மட்டன் இல்லை என்ற செய்தி மணமகனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து மணப்பெண்ணின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் திருமணத்தை நிறுத்துவதாக கூறி வெளியே சென்றுள்ளார். மணமகளின் பெற்றோர் மணமகனிடம் திருமணத்தை நிறுத்த வேண்டாம், பிரச்சினை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ கூறியுள்ளனர்.
ஆனால் மணமகனோ அது எதைக் கேட்காமல், அருகில் இருந்த அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மணமகனின் உறவினர்களும் அங்கு சென்றனர்.
இந்நிலையில் மாலை நேரத்தில் வெளியே சென்ற மணமகன் வேறொரு பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே மட்டன் பரிமாறவில்லை என்பதற்காக திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.