தெற்கு தில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனிலிருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி விரைவு ரயில் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் சுரங்கப் பாதை வழியாக சனிக்கிழமை அதிகாலை சென்றபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
கோவாவின் மட்கெளன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த 02414 என்ற எண் கொண்ட இந்த விரைவு ரயில், மும்பையிலிருந்து 325 கி.மீ. தொலைவில் உள்ள கர்புடே சுரங்கப் பாதை வழியாக சென்றபோது சனிக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கொங்கண் ரயில்வே இந்த ரயில் பாதையை பராமரித்து வருகிறது.
ரயில் பாதையில் பெரிய பாறை விழுந்து கிடந்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்தது. விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.
இதுகுறித்து கொங்கண் ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், ‘விபத்துக்குள்ளான ரயிலில் 309 பயணிகள் பயணித்தனர்.
அவா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், மீட்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு, சனிக்கிழமை காலை 8.18 மணிக்கு ரயில் பாதை சீர் செய்யப்பட்டு ரயில் ஓட்டத்துக்கு தகுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, ராஜதானி விரைவு ரயில் அதன் பயணத்தை காலை 9.14 மணிக்கு மீண்டும் தொடங்கியது. மேலும், கொங்கண் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் பாதையில் காலை 10 மணிக்கு மேல் ரயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.