தமிழகத்தில் நேற்று முதல் அனைத்து கோவில்களும் திறக்கப் பட்டன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரானா 2 வது அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. கொரோனா பரவல் தமிழகத்தில் மெள்ள மெள்ளக் குறையத் தொடங்கியதை அடுத்து, கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.
அந்த வகையில் நேற்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திறந்து பொதுமக்களின் வழிபாட்டிற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோவில், முக்தீஸ்வரர் திருக்கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்கள் நேற்று கோவிலில் வளாகங்கள் அனைத்தும், கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு நேற்று முதல் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே, அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் கோயில்கள் திறக்கப் பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல செவ்வாய்க்கிழமை இன்று முதல் (ஜூலை 6) அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அமாவாசை சிறப்பு வழிபாடு சொரிமுத்து ஐயனார் கோயிலில் புகழ்பெற்றது.
செவ்வாய்க் கிழமைகளில் சிறப்பு பூஜைக்காக முருகன் கோயில்களுக்குச் செல்வது பக்தர்களின் வழக்கம். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.