அந்தச் சிறுமிக்கு சரியாக பேசக்கூட வரவில்லை. இரண்டரை வயது இருக்கும். அதனாலென்ன…?, தன் தாயையும் தம்பியையும் காப்பாற்றினாள்.
என்னதான் நடந்தது? அந்த சிறுமியின் தாய் ஒரு ரயில்வே பாலத்தின் மீது மயக்கமடைந்து கிடந்தார். தாய்ப்பால் குடிக்கும் சின்னஞ்சிறுவன் அம்மா எழுந்திருக்காததால் விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.
இந்தச் சூழ்நிலையில் இரண்டரை வயது உள்ள சிறுமி என்ன செய்திருப்பாள? என்ன செய்வது என்று தெரியாமல் அவளும் அழ ஆரம்பித்து இருப்பாள்.
ஆனால் இந்தச் சிறுமி அவ்வாறு செய்யவில்லை. சூழ்நிலையை புரிந்து கொண்டாள். ரயில்வே போலீசாருக்கு விவரம் தெரிவித்தாள். தன்னவர்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டாள். ஆச்சரியமமாக உள்ளதல்லவா?
இந்த சம்பவம் உத்தரபிரதேசம் மொராதாபாதில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. அம்மா நினைவில்லாமல் மயக்கம் போட்டு விழுந்து கிடக்கிறாள். எத்தனை எழுப்பினாலும் அவள் எழுந்திருக்கவில்லை. தம்பியோ விடாமல் விக்கி விக்கி அழுகிறான்.
அதைப் பார்த்த அந்தச் சிறு பெண் தன் குட்டிப் பாதங்களை எடுத்து வைத்து வேகமாக ஸ்டேஷனில் இருந்து இறங்கிச் சென்று யாராவது உதவிக்கு இருக்கிறார்களா என்று பார்த்தாள். அவளுக்கு என்ன செய்வது… யாரிடம் என்ன பேசுவது என்று ஒரே குழப்பம்.
ரயில்வே பெண் போலீசார் அங்கு தென்பட்டதால் அவரிடம் வேகமாகச் சென்றாள். ஏதோ சொல்ல வேண்டும் என்று அந்த சிறுமி முயற்சிப்பதும் கையை ரயில்வே பிளாட்பாரம் பக்கம் திருப்பி காட்டுவதுமாக இருந்த அந்தச் சிறுமி ஏதோ ஆபத்தில் இருக்கிறாள் என்று உணர்ந்த அந்த பெண் கான்ஸ்டபிள் சிறுமியிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.
சரியாக பேச்சு கூட வராத அந்தச் சிறுமி தன் மழலை மொழியில் ஏதோ சொல்கிறாள். அந்தப் பெண் போலீஸ் கான்ஸ்டபிளை கையை பிடித்து இழுத்துக்கொண்டு தன் தாயிடம் செல்கிறாள். அங்கு ஒரு பெண் கீழே கிடந்ததை பார்த்த உடனே ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனையில் சேர்த்தனர் போலீஸார்.
தாயிடமும் தம்பியிடமும் போலீசாரை வரவழைத்த பின் தன் தாய்க்கு எந்த ஆபத்தும் இல்லை… இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்… என்று அந்தச் சிறுமியின் முகத்தில் ஒரு திருப்தி நிலவியது. தற்போது அந்த சிறுமியின் தாயும் தம்பியும் உடல்நிலை தேறி வருகிறார்கள்.
ஆனால் இன்னும் அந்த தாய்க்கு மயக்கம் தெளியாததால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ன நடந்தது எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை அதிகாரிகள் கண்டு பிடிக்க முடியாமல் ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்தக் காட்சி போலீசாரின் உள்ளங்களைக் கரைய வைத்தது. அந்தச் சிறுமியை மனதாரப் பாராட்டினார். நம் உள்ளங்களையும் கரைய வைக்கும் அந்த சிறுமிக்கு நாமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிப்போம். அவள் எண்ணம் போல் அவள் தாயும் தம்பியும் நலமாக விடு திரும்பட்டும்!
குழந்தைகளை தைரியமாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு சிறு வயதலேயே பெற்றோர் பெயர் ஊர் பெயர் போன் நம்பர் போன்றவற்றை சொல்லித்தர வேண்டும் என்றெல்லாம் சொல்வது இது போன்ற ஆபத்து சமயத்தில் கலங்காமல் துணிவோடு செயல்படுவதற்காகத் தான்.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்