கரூரில் பாஜக தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளைய முதல்வரே என போஸ்டர் ஒட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர், பாஜக நிர்வாகிகள்! மேலும், நாளைய முதல்வரே என்ற வாசகம் இடப்பெற்றிருப்பதினால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!
கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் ஈடுபட்டார்.
பாஜக.,வில் சேர்ந்த அவருக்கு, பாஜக., தலைமை மாநில துணைத் தலைவராக பதவி அளித்து கௌரவித்தது. அத்துடன், கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக., வேட்பாளராக நிறுத்தப்பட்டு தேர்தல் களத்தில் சிறிதளவு வாக்குகள் வித்யாசத்தில் தனது வெற்றியை பறிகொடுத்தார்.
பள்ளப்பட்டி பகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளே நுழைய தடை என்று கூறி ஜமாத் முடிவு செய்த நிலையில், பள்ளப்பட்டி பாகிஸ்தானில் இல்லை, நமது இந்தியாவில் தான் உள்ளது. ஆகவே ஒவ்வொரு இந்தியனும் வாக்குகள் சேகரிக்க செல்லலாம் என்று முதன்முதலில் பள்ளப்பட்டி பகுதியில் பாஜக நுழைந்தது என்றால் அது இவரால் தான் முடியும் என்று பேசவைதஹ்து!
இதுமட்டுமின்றி, பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் நம்பிக்கையையும் இவர் பெற்றார். ஆயினும், அமைப்பு ரீதியாக சிலர் கூடி மத ரீதியாக வாக்குகளை இவருக்கு எதிராக ஒன்றிணைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அண்ணாமலை பாஜக., மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதை அடுத்து இவருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவுக் குரல் எதிரொலித்தது. பாஜக.,வின் மாநிலத் தலைமைக்கான அறிவிப்பைக் கொண்டாடும் விதமாக மாநிலம் முழுதும் பாஜக.,வினரும், இளைஞர்களும் வெடிகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இது போல் கரூர் பாஜகவினர் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பாஜக., சார்ந்த பொறுப்பாளர்கள் போஸ்டர்களை கரூர் நகர் முழுவதும், மாவட்டம் முழுவதும் ஒட்டியிருந்தனர். அதில், ’நாளைய முதல்வரே!’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.
அதில் கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே சட்டம் என தலைப்பிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்றைய தலைவரே, நாளைய முதல்வரே பணி சிறக்க வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் கரூர் நகரில் முக்கிய சாலைகளான பழைய பை – பாஸ் சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, கோவை சாலை, ஜவஹர் பஜார் உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழக அளவில் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.