திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து சுவாமிக்கு பூஜைகள் கோவில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன்பின் அரசின் முயற்சியால் ஓரளவு கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் முன்பதிவு அடிப்படையில் மட்டும் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் கோவில் இணையதளம் மூலமாக மாதந்தோறும் 300 ரூ தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் 20ஆம் தேதி முதல் அடுத்த மாதத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
அந்த அடிப்படையில் 2022 ஜனவரி மாதத்துக்கான 300 ரூபாய் டிக்கெட் விநியோகம் கடந்த டிசம்பர் மாதமே தொடங்கியது. ஜனவரி மாதம் புத்தாண்டு மற்றும் ஏகாதசி விழாவை முன்னிட்டு இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 20 நிமிடத்தில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டது.
இதனைதொடர்ந்து கடந்த 13ஆம் தேதி அன்று திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பூஜைகள் சிறப்பாக பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அத்துடன் கடந்த நவம்பர் மாதம் மழை காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியது.
மேலும் பக்தர்கள் வசதிக்காக ஏற்கனவே மலைப்பாதை சீரமைக்கப்பட்டுள்ளதால் எந்தவித பிரச்சனையும் இன்றி பயணிக்கலாம் என்று தேவஸ்தான அதிகாரி கூறியுள்ளார்.
இதனால் முன்பதிவு செய்து நவம்பர் மாதத்தில் சாமி தரிசனம் செய்யாதவர்கள் வரலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சுற்றுலாத் துறையின் சார்பாக சர்வதேச விமான நிலையத்தில் விஐபி தரிசன டிக்கெட் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விரைவில் டிக்கெட் விற்பனைக்காக சிறப்பு மையமானது அமைக்கப்பட்டு ரூ10,500 செலுத்தி பக்தர்கள் விஐபி தரிசனம் டிக்கெட்டை பெற்று கொள்ளலாம்.