10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஐபோன் தற்போது கிடைத்துள்ளதாம். இதற்கு மகிழ்ச்சி அடைவதா, வேதனை அடைவதா என குழப்பத்தில் இருக்கிறாராம் ஐபோனின் உரிமையாளர்.
மேரிலாந்தில் பெக்கி பெக்மேன் என்பவர் தனது ஐபோனை 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2012 ஆம் ஆண்டு தொலைத்து விட்டார். வீடு முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. கொஞ்ச நாட்களுக்கு தேடிய பெக்கி, வெறுத்து போய் புதிய ஐபோனை வாங்கிக் கொண்டார்.
இந்த நிலையில் அவர்களது வீட்டு கழிவறையில் தண்ணீரை ஃபிளஷ் செய்த பின்னர் ஏதோ கலகலவென சப்தம் கேட்டுள்ளது. இதே போல் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் கழிவறையை பயன்படுத்தும் போதெல்லாம் ஏதோ அதிரும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது.
கழிவறை பழையதாக இருந்ததாலும் கட்டுமான பணிகளை சரி வர செய்யாததாலும் இது போல் சப்தம் கேட்டிருக்கும் என பெக்கியும் அவரது கணவரும் நினைத்துக் கொண்டனர். அந்த வெஸ்டர்ன் டாய்லெட்டை நகர்த்த பெக்கியின் கணவர் முடிவு செய்தார். அது போல் அவர் செய்த போது அவருக்கு ஆச்சரியம்.
டாய்லெட்டுக்குள் பெக்கி தொலைத்த ஐபோன் கிடைத்தது. உடனே ஓடி போய் பெக்கியிடம் அவரது கணவர் தெரிவித்தார். இதை நம்பாமல் பெக்கியும் கழிவறைக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு அவர் தொலைத்த ஐபோன் கிடைத்தது. ஐபோனை எடுத்தனர்.
அதன் பின்புறம் பார்த்த போது திறந்திருந்தது. ஓபன் செய்து உள்புறம் பார்த்தனர். நல்ல வேளையாக ஐபோன் நல்ல கண்டிஷனில் இருந்தது. இதனால் பெக்கி மகிழ்ச்சி அடைந்தார்.
டாய்லெட் பைப்பில் இருந்ததால் போனின் உட்புறம் எதுவும் ஆகாமல் இருந்துவிட்டது. இது தெரியாமல் புதியதாக ஒரு போனை வாங்கிவிட்டோமே என மகிழவும் முடியாமல் வேதனை அடையவும் முடியாமல் இருக்கிறாராம் பெக்கி