திரிகுட் மலை உச்சியில் ரோப் கார்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து தொடர்பான புதிய வீடியோ வைரலாகி வருகிறது.
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று பாபா வைத்யநாத் கோவில். இது ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில், திரிகுட் மலை மீது உள்ள இக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப் கார் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் இதுவாகும். 1,500 அடி உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைந்துள்ள இந்த ரோப் கார் 766 மீட்டர் நீளம் கொண்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரோப் கார்கள் மூலம் கோவிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் உள்பட 48-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். ரோப் கார்கள் மலை உச்சியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இதனால், அனைத்து ரோப் காா்களும் அந்தரத்தில் சுமாா் 100 அடி உயரத்தில் நின்று விட்டன. பின்னர் 2 ஹெலிகாப்டா்களில் வந்த விமானப் படையினா், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 11 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.
ரோப் காா்களில் சிக்கித் தவித்தவா்களுக்கு ஆளில்லா விமானங்கள்(ட்ரோன்) மூலமாக, உணவு, குடிநீா் அளிக்கப்பட்டது. அதன்பின்னரும் தொடர்ந்து 44 மணி நேர மீட்புப் பணியில் இதுவரை 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணியின்போது இருவர் தவறி விழுந்து உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது.
இந்நிலையில், விபத்து ஏற்பட்ட ரோப் காரில் பயணம் செய்தபோது அதிலிருந்த பயணி ஒருவர் எடுத்த வீடியோவில் ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Footage of Deoghar Ropeway Accident
— Purushottam Keshri (@k_puru30) April 12, 2022
10-04-2022 4:30pm#Jharkhand#Deoghar#DeogharRopewayAccident #DeogharAccident#PMModi#IAF pic.twitter.com/GvdoIfIh4Q