பெருங்குடி குப்பை கிடங்கில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீப்பிடிக்க தொடங்கியது இன்றும் புகைமூட்டம் சூழ தீ பற்றி எரிகிறது.தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக போராடியும் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்.
தற்போது கடுமையான வெயில் தாக்குவதால் குப்பை கூளங்களும் காய்ந்து கிடக்கின்றன. அத்துடன் காற்றும் பலமாக வீசுவதால் தீஜுவாலை சிலஅடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிகிறது.
இந்த குப்பை கிடங்கு பள்ளிக்கரணை- துரைப்பாக்கம் 200 அடி சாலையில் தொடங்கி பெருங்குடி வரை சுமார் 1000 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பெரிய குப்பை கிடங்கு ஆகும்.
முழுக்க முழுக்க சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ச்சி அடையாத கிராம பகுதியாக இருந்தது. அப்போது மாநகராட்சியில் இருந்து லாரிகளில் குப்பையை எடுத்துச்சென்று அங்கு கொட்டத்தொடங்கினார்கள். பெரிய அளவில் குடியிருப்புகளோ, தொழில் நிறுவனங்களோ வந்திராத அந்த காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.ஆனால் காலப்போக்கில் மாநகராட்சி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சியும், இதனால் தினமும் குவிந்த ஆயிரக்கணக்கான டன் குப்பைகளும் அங்கு கொண்டு கொட்டப்பட்டு வந்ததால் குப்பை கிடங்கு விரிவடைந்தது.
இத்தனை ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகளும் தேங்கி பல அடி உயரத்துக்கு 2, 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு குப்பை மலையாக காட்சியளிக்கிறது. தேங்கிவிட்ட பல லட்சம் டன் குப்பையை அகற்றுவதும், மறுசுழற்சி செய்வதும் மிகப்பெரிய சவாலான பணி என்பதால் இங்கு தீ பற்றி எரிகிறது.தீ யால் காற்றில் வீசும் புகை மூட்டம் இவைகளால் பொதுமக்கள் பறவைகளுக்கு பிரச்சினை ஏற்படுத்துகிறது.