சாக்லேட் மூலம் பரவக்கூடிய சால்மோனெல்லா தைபிமுரியம் என்ற நோய் பற்றி உலக சுகாதார மையம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின்னர் வைரஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் புதிய வகை பாக்டீரியா பற்றி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் சால்மோனெல்லா தைபிமுரியம் என்ற பாக்டீரியா தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லியில் உள்ள தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இன்டர்னல் மெடிசின் மருத்துவர் கவுரவ் ஜெயின் கூறுகையில், “சால்மோனெல்லா தொற்று அல்லது சால்மோனெல்லோசிஸ் என்பது மனிதர்களின் குடலிறக்கத்தை பாதிக்கும் பொதுவான பாக்டீரியா தொற்று” எனத் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, “பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் மூலமாக இந்த பாக்டீரியா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக உலகின் புகழ்பெற்ற பெல்ஜியம் சாக்லேட்டில் மூலம் பாக்டீரியா பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை சாக்லேட் பெல்ஜியத்தில் இருந்து 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது”.
அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்வதன் மூலமாக உருவாகும் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா குடல் எபிட்டிலியத்தை அடைந்து இரைப்பை குடல் நோயை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்று (CDC) படி, சால்மோனெல்லா தைபிமுரியம் வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் இரைப்பை குடல் அழற்சியை ஏற்படுத்துகிறது.
இந்த அறிகுறிகள் சால்மோனெல்லா பாக்டீரியாவை கொண்டிருக்கும் உணவு அல்லது தண்ணீரை உட்கொண்ட 12 முதல் 72 மணி நேரத்திற்குள் வெளியே வருகிறது.
நான்கு முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும் இந்த நோயால் பாதிக்கப்படும் மக்களில் பெரும்பாலானோர் சிகிச்சையின்றியே குணமடைவதாக கூறப்படுகிறது.
சிலருக்கு வயிற்றுப்போக்கு மிகவும் கடுமையாக இருக்கும், நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். சால்மோனெல்லா தொற்று குடலில் இருந்து இரத்த ஓட்டத்திற்கும் பின்னர் உடலின் மற்ற இடங்களுக்கும் பரவக்கூடும்.
அரிதான சந்தர்ப்பங்களில், சால்மோனெல்லா நோய்த்தொற்று ஒரு நபருக்கு உடனடியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணத்தை ஏற்படுத்தும்” என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள்,
65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள்,
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும்
சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:
பச்சையாக அல்லது சமைக்காத முட்டை அல்லது இறைச்சியை சாப்பிட வேண்டாம்.
கிருமி நீக்கம் செய்யப்படாத பால் அல்லது ஜூஸ் போன்றவற்றை குடிக்க கூடாது.
பச்சையான கோழி, இறைச்சி அல்லது முட்டைகளை சமைப்பதற்கு நன்றாக கழுவ வேண்டும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகக் கழுவியும், முடிந்தால் தோல்களை நீக்கியப் பிறகும் உண்ணலாம்.
வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் மற்றவர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டாம்.
உணவை சமைப்பதற்கு முன்பும், பரிமாறிய பின்பும் சரியாக குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
உணவைக் கையாளும் முன்னும் பின்னும் சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கைகளை நன்றாகக் கழுவவும்.
சமையலறையில் உணவு தயாரிக்கும் முன் அவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.
சமைத்த உணவை பச்சை உணவோடு கலக்காதீர்கள் அல்லது அவற்றைத் தயாரிக்க அதே பாத்திரங்களைப் பயன்படுத்தாதீர்கள்.
இறைச்சியை சரியான குறைந்தப்பட்ச வெப்பநிலையில் சமைக்கவும்.
விலங்குகள், அவற்றின் பொம்மைகள், படுக்கை ஆகியவற்றைத் தொட்ட பிறகு சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை கழுவவும்.