தென் தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் நீரில் தத்தளிப்பதால், 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை – நெல்லை, நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில், திருச்சி – திருவனந்தபுரம் விரைவு ரயில், திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில், நெல்லை – ஜாம்நகர் விரைவு ரயில் சேவைகள் டிச.18 இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி – செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும்
1) 06685 திருநெல்வேலி – செங்கோட்டை – காலை 7 மணி
2) 06682 செங்கோட்டை – திருநெல்வேலி – காலை – 6:40
3) 06681 திருநெல்வேலி – செங்கோட்டை – காலை – 9:45
4) 06684 செங்கோட்டை – திருநெல்வேலி – காலை 10:00
5) 06687 திருநெல்வேலி – செங்கோட்டை – மதியம் 1:50 ஆகிய ரயில்கள் அனைத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் செயலர் கே.எச். கிருஷ்ணன் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு எழுதிய மின்னஞ்சல் கடிதத்தில், செங்கோட்டை – புனலூர் இடையிலான வழித் தடத்தில் 24 பெட்டிகளுடன் ரயில்கள் செல்ல ஏதுவாக பாதையை மேம்படுத்தக் கோரியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், எங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். தயவுசெய்து சாதகமாக ஏற்பாடு செய்யுங்கள். கொல்லம்- புனலூர் – செங்கோட்டை அகலப்பாதை வழித்தடம் மேம்படுத்தப்பட வேண்டும்.
உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் சிறந்த பொறியாளர்களைக் கொண்ட இந்திய ரயில்வே 24 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை கொங்கன் மற்றும் பிற மண்டல ரயில்வேயின் மலைப்பகுதிகள் வழியாக இயக்கும் போது, அழகான கொல்லம் – புனலூர் – செங்கோட்டை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை நோக்கி அதிக கவனம் செலுத்தவில்லை. மிகவும் தேவையான அபிவிருத்திகளுடன் கூடிய ரயில் பாதை இது.
திருவனந்தபுரம் – நாகர்கோவில் – திருநெல்வேலி – விருதுநகர் வழித்தடத்துக்கு மாற்று வழித்தடமாகத் திகழ்கிறது, திருவனந்தபுரம் – கொல்லம் – புனலூர் – செங்கோட்டை – தென்காசி – ராஜபாளையம் – சிவகாசி – விருதுநகர் அகலப்பாதை வழித்தடம். இது, இன்றுவரை 98% மின்மயமாக்கப்பட்ட பிரிவாக உள்ளது.
கொல்லம் – செங்கோட்டை – தென்காசி- ராஜபாளையம் – சிவகாசி – விருதுநகர் வழித்தடம் மற்றும் தென்காசி – திருநெல்வேலி வழித்தடம் ஆகியவற்றை இந்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து அகலப்பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகளை நடத்தி தடத்தை மாற்றியமைத்துள்ளது.
மார்ச் 2024க்குள் புனலூர் – செங்கோட்டை வழியும் மின்மயமாக்கப்படும். ஏற்கெனவே கொல்லத்தில் இருந்து புனலூர் வரையிலும், செங்கோட்டையிலிருந்து விருதுநகர் வரையிலும், தென்காசியிலிருந்து திருநெல்வேலி வரையிலும் மின்மயமாக்கல் முடிந்துவிட்டது.
திருநெல்வேலி பகுதியில் நேற்று 17.12.23 கனமழை பெய்து வருவதால், திருநெல்வேலி வழியாக கேரளா/ தமிழகம் செல்லும் பல ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் – கொல்லம் – புனலூர் – செங்கோட்டை வழித்தடத்தை 24 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை ஆர்.டி.எஸ்.ஓ.வின் விரைவான பரிந்துரைகளுடன் இயக்குவதற்கு போதுமானதாக ரயில்வே அமைத்தால் அது அனைவருக்கும் குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கும். இது போன்ற நெருக்கடியான நேரங்களில் மாற்று ரயில்பாதையாக இயக்க சாத்தியமானதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.