பொங்கல் பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் பலரும் நாளை முதல் சென்னை திரும்புவார்கள். அந்த நிலையில் பொத்தேரி ரயில் நிலையத்தில் நாளை முதல் கூட்டம் நிரம்பி வழியப்போகிறது என்பது எதிர்பார்க்கப்படும் செய்தி.
பொங்கல் முடிந்து நாளை முதல் பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி வருவோரை, ஆம்னி பேருந்துகளில் ஏறினால் சென்னைக்குள் காலை 6 அல்லது 7 மணிக்கு மேல் வந்தால் விடமாட்டார்கள்.. அதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும்.
இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வருவோர். கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் போக 1.5 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டும். அவ்வளவு தூரம் பைகளை வைத்துக் கொண்டு நடக்கவோ, ஆட்டோக்களிலோ பயணிக்க முடியாது..
எனவே சென்னைக்குள் நுழையும் போதே பொத்தேரி ரயில் நிலைய பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளுங்கள். பொத்தேரி ரயில் நிலையம் ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு இறங்கி அப்படியே உள்ளே நுழைந்து எளிதாக புறநகர் ரயில்களில் ஏறி எழும்பூர், திநகர், தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, கோடாம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னையின் எந்த பகுதிக்கும் மின்சார ரயிலில் செல்ல முடியும்.
சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின்ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும். அதுமட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியதிருக்கும். அதனால் அரசு பேருந்து ஓட்டுநர்களுமே, ரயிலில் செல்ல விரும்புவோரின் வசதிக்காக பெத்தேரியில் இறக்கிவிடுகிறார்கள். எனவே மின்சார ரயிலில் போக பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கிவிடுங்கள்.. எளிதாக இருக்கும்..
முன்னர் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பேருந்துகள் சென்ற போது சென்னை நகரத்துக்குள் பயணிக்க வேண்டியவர்கள் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை ஒட்டி உள்ள ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்கள் மூலம் சென்றார்கள். இப்போது கிளாம்பாக்கம், கோயம்பேட்டின் இடத்தைப் பிடித்துக் கொண்டதால், பெருங்களத்தூரின் இடத்தை பொத்தேரி பிடித்துக் கொண்டுள்ளது. பயணிகளுக்கு வசதியாக ஜிஎஸ்டி சாலையை ஒட்டி நடக்க வேண்டிய தேவை எதுவும் இன்றி அருகிலேயே அமைந்துள்ள பொத்தேரி ரயில் நிலையம், தொலைதூரத்தில் இருந்து வருபவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை தற்காலிகமாக ஏற்படுத்திக் கொடுக்கும்.