சென்னை:
தமிழகத்துக்கு வந்துள்ள ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் நோக்கம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதே என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர், இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. இங்கே எந்த மதத்தினரும், எந்த அமைப்பினரும் ஊர்வலம் செல்லலாம். இந்த ரத யாத்திரையை நடத்துவது ஒரு சாதாரண தனியார் அமைப்பு. இந்த ரத யாத்திரைக்கும், ஆர்எஸ்எஸ், விஎச்பி போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பில்லை. ஆனால் வேண்டுமென்றே இது வி.எச்.பி நடத்தும் யாத்திரை என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். இந்த யாத்திரையை நடத்துவது, ராமதாஸா மிஷன் யுனிவர்சல் சொசைட்டி என்ற அமைப்பு. இதற்கும் இந்து அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என்று விளக்கம் அளித்தார் ஜெயக்குமார்.
மேலும், இந்த ரத யாத்திரையை கேரளா உள்ளிட்ட வேறு பிற மாநிலங்களில் எதிர்க்காதபோது தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நெல்லை மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவு ரத யாத்திரைக்கு பொருந்தாதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 144 தடை என்பது ரத யாத்திரைக்காக அல்ல, ஒரு குழுவாக எதிர்ப்பு கோஷம் எழுப்புகிறவர்கள்… சட்டம் ஒழுங்கை சீர்குலைக்காமல் இருக்க போடப் பட்டது என்று கூறினார்.
மேலும், ரத யாத்திரை எல்லா மாநிலங்களும் வந்தது இங்கே மட்டும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அவர்கள் வட மாநிலங்களில் இருந்து கிளம்பி 5 மாநிலங்கள் வழியே இங்கே வந்து, ராமேஸ்வரம் போய், பின் கன்னியாகுமரி போய் அப்படியே ஊருக்கு போய் விடுவார்கள். அவர்கள் அவர்களின் வழியில் அமைதியாக அப்படியே சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அதை தடுத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பதை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. இது பெரியார் மண், அண்ணா மண், அம்மா மண். இங்கு அப்படி யெல்லாம் யாரோ ஒருவர் ஒரு ரத யாத்திரை நடத்தி மாற்றி விட முடியும் என்பது நடக்காதது என்று கூறினார் ஜெயக்குமார்.