யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை மகிழ்விக்க சிபிஐ முயற்சி செய்கிறது என்று சிபிஐ மீது குற்றம் சாட்டிய தயாநிதி மாறனுக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தனது முன்னாள் உதவியாளர் உள்பட மூவர் கைது செய்யப் பட்டதற்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் தர அவருக்கு உரிமை உண்டு. ஆனால், சிபிஐ மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டை அவர் கூறுகிறார் என்று கண்டனம் தெரிவித்தார் சுவாமி. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதனை பெரும் அளவில் முறைகேடாக பயன்படுத்தியவர்கள் மாறன் சகோதரர்கள். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தான் குற்றமற்றவர் என்ற ரீதியில் தயாநிதி மாறன் சொன்னால் அதை யாரும் நம்பப் போவதில்லை என்றார் சுப்பிரமணியம் சுவாமி. முன்னதாக, பிஎஸ்என்எல் உயர் ரக இணைப்புகள் முறைகேடாக சன் டிவிக்கு எடுக்கப்பட்ட விவகாரத்தில், தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் மற்றும் சன் டிவி யின் ஊழியர்கள் இருவர் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அது குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். யாரோ ஒர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை திருப்திப் படுத்துவதற்காக சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் அடிக்கடி தில்லியிலும், சென்னையிலும் சிபிஐ அதிகாரிகள் அழைத்த போதெல்லாம் சென்று விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார்கள். இப்போது திடீரென்று அவர்களைக் கைது செய்து, சன் டிவிக்கு தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாக ஒப்புக் கொள்ளும்படி அடித்து துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். சிபிஐ மூன்றாம் தர நடத்தையை அவர்கள் மீது காட்டியுள்ளது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டினார் தயாநிதி மாறன்.