கோவை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தப்ப முடியாது, அவரது மேல் முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. பாஜக.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி இன்று கோவைக்கு வந்திருந்தார். அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்ப முடியாது. வழக்கு வலுவாக உள்ளது. மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இத்தனை சொத்துக்களை எப்படி வாங்க முடியும்? எனவே அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்று கருதுகிறேன். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கருணாநிதியின் குடும்பம், மாறன், ப.சிதம்பரம் என எல்லோரும் சிறைக்குச் செல்வது உறுதி. வழக்கு விசாரணை சற்று தாமதமாகலாமே தவிர வழக்கில் இருந்து யாரும் தப்ப முடியாது. அதிமுக., திமுக., இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒன்றுதான். நாட்டுக்கு துரோகம் செய்வது, ஊழல் செய்வதுதான் அவர்களின் கொள்கை. நிலம் கையகப்படுத்தும் சட்டம், சாலைப் பாதுகாப்புச் சட்டம், புதிய காப்பீட்டு மசோதா போன்றவற்றுக்கு எதிர்ப்பு இருந்தாலும், மெஜாரிட்டி பலம் இருப்பதால், அவற்றை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்காது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக., தேமுதிக., கூட்டணி அமையுமா என்பதை இப்போது கணிக்க வேண்டியதில்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. தமிழகத்தில் பாஜக., தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது எனது விருப்பம். தாலி என்பது தேசத்தின் கலாசாரம் தொடர்புடையது. அதனை அகற்றும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும் தாலியை கழற்றியவர்கள் மீதும் தேசத் துரோக வழக்கு தொடரவேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போதைய தமிழக அரசு அதன் மீது அக்கறை காட்டவில்லை – என்று கூறினார்.