டிஎன்பிஎல் 3வது சீசனில், 18வது போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. டிஎன்பிஎல் முதல் சீசனில் சேப்பாக் – தூத்துக்குடி அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. அதில் சேப்பாக் அணியை 122 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி சாம்பியன் பட்டம் வென்றது.
தொடர்ந்து 2வது சீசனின் இறுதிப்போட்டியிலும் இதே அணிகள் மீண்டும் மோதின. அதில் தூத்துக்குடி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போது நடைபெறும் 3வது சீசனில் இந்த 2 அணிகளும் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகின்றன. தூத்துக்குடி அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் இருக்கிறது.
தகுதிச்சுற்றுக்கான வாய்ப்பில் தூத்துக்குடி இன்னும் நீடிக்கிறது. ஆனால், எஞ்சியுள்ள 3 போட்டிகளில் கட்டாயம் வென்றால் மட்டுமே அந்த வாய்ப்பு உறுதியாகும். அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஒரு போட்டியல் சிறப்பாக விளையாடினால் அடுத்த போட்டியில் சொதப்புகின்றனர்.
எனினும் இன்று நடைபெறும் போட்டியில் கவுசிக் காந்தி, சதீஷ், மலோலன் ரங்கராஜன், தினேஷ், அதிசியராஜ் ஆகியோர் அதிரடி காட்டினால் தூத்துக்குடி தகுதிச் சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ளும். அதே நேரத்தில் 2முறை இறுதிப்போட்டி, ஒரு முறை சாம்பியன் என்று கடந்த 2 சீசன்களில் கலக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இந்த முறை தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது. இனி நடைபெறும் 3 போட்டிகளில் சேப்பாக் அணி வென்றாலும் அது ஆறுதல் வெற்றியாகதான் இருக்கும். இப்படி கடுமையான சூழ்நிலையில்தான் சேப்பாக் அணி இன்று தூத்துக்குடி அணியுடன் மோத உள்ளது.
சொந்த ஊரில் நடைபெறும் போட்டி என்பதால் சேப்பாக் அணி நம்பிக்கையுடன் களமிறங்கும். அணியின் கோபிநாத், அஸ்வின், சசிதேவ், சன்னிகுமார், அருண்குமார் என நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால் சேப்பாக் அணி முதல் வெற்றியை ருசிக்கும். எஞ்சியுள்ள ஆட்டங்கள்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்து ஜூலை 31ம் தேதி காஞ்சி வீரன்ஸ் அணியையும், ஆக.3ம் தேதி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியையும் சந்திக்க உள்ளது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஆக.1ம் தேதி திருச்சி வாரியர்ஸ் அணியுடனும், ஆக.5ம் தேதி காரைக்குடி காளை அணியுடனும் மோதுகிறது.