இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்கள் கிரிக்கெட் சூப்பர் லீக் தொடரில் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று நடந்த போட்டியில் லான்காஷையர் தண்டர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணி, 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா, இந்த ஆட்டத்தில் 61 பந்துகளில் 102 ரன்கள் விளாசி தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
இதன்மூலம், பெண்கள் டி20 போட்டிகளில் சதமடித்த 2வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு, மற்றொரு இந்திய வீராங்கனையான மிதாலி ராஜ் சதமடித்திருந்தார்.
ஸ்மிருதி மந்தனா, லோக்பரோக் லைட்னிங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து, மிக குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீராங்கனை என்ற சோபி டிவைனின் சாதனையை ஏற்கனவே சமன் செய்திருந்தார்.