நேற்று இரவு 7 மணிக்கே சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் நள்ளிரவு போல காட்சி அளித்தது. சிறிய பெட்டிக்கடைகளில் தொடங்கி பெரிய ஓட்டல்கள் வரை அத்தனையும் அடைக்கப்பட்டுவிட்டது.
இன்று காலையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக மட்டும் வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்திருந்தனர். முன்னதாக கருணாநிதி மரணம் அடைந்துவிட்ட தகவல் பரவியதும் நேற்று மாலையில் ஆவின் பாலகங்களில் நீண்ட வரிசையில் நின்றும் பொது மக்கள் பால் வாங்கியதை காண முடிந்தது.
சென்னையை பொறுத்த வரையில் தினமும் பரபரப்பாகவே விடியும். அதிகாலையிலேயே சாலைகளில் வாகனங்கள் ஓடத் தொடங்கிவிடும். மாநகர பேருந்துகளும் முழு அளவில் இயங்கும். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதுண்டு. ஆனால் இன்று காலையில் அதுபோன்ற எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை. பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி இருந்தது. காலையில் ஒரு பஸ் கூட இயக்கப்படவில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இது முழுஅடைப்பு நடந்தால் எப்படி இருக்குமோ? அது போன்று வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நிலையே காணப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.
இதனால் வெளியில் ஆட்கள் நடமாட்டம் இன்றியே காணப்பட்டது. தி.மு.க.வினர் மட்டும் தங்களது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றனர். நேற்று மாலையிலேயே பஸ், போக்குவரத்து வெகுவாக குறைக்கப்பட்டது. மின்சார ரெயில்களும் முழு அளவில் இயக்கப்படவில்லை. குறைந்த அளவில் ஓடிய பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. படியில் தொங்கியபடியே பெண்களும் பயணம் செய்தனர்.