திருவள்ளூர்: புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மேலும், பொன்னேரி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் குளத்தில் கொட்டும் மழையிலும் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சாதாரணமாக வரும் எல்லா அமாவாசை நாள்களிலுமே பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவது உண்டு.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தை மகாளய அமாவாசையாக பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது என்பதும், புண்ணியம் மிகுந்தது என்பதும் ஹிந்துக்களின் நம்பிக்கை.
மேலும் முன்னோர்களின் ஆசி பெற இந்த நாள் உகந்தது என்பதால், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
இங்கே வழிபட்டால், நோய்கள் தீரும், தடைப்பட்ட திருமணம் நடக்கும், குழந்தை பேறு கிட்டும். இதற்காகவே அருள் தரும் வீரராகவப் பெருமாளை வழிபட ஏராளமான பக்தர்கள் இங்கே வருகை தருவதுண்டு.
அதுபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் குளத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தங்களது முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இது குறித்த காணொளிக் காட்சி.. ( வீடியோ )