இந்து அறநிலைய கோவில்களிலும் நிறைய போலி சீட்டுகள் புழங்குகிறது. இதனால் 100 கோடி வரை மோசடி நடைபெறுகிறது. இந்து சமய அறநிலைய துறையில் வேலை செய்யும் ஆணையரில் இருந்து அடிப்படை பணியாளர் வரை அனைவரின் சொத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று, திருத்தொண்டர் சபை ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார். .
மதுரை விமான நிலையத்தில் திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது குறிப்பிட்டவை….
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளிலே மிகுந்த வருமானம் ஈட்டித் தரக்கூடியது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்கள்தான்! வணிக நோக்கத்தில் பார்த்தோமேயானால் கூட சம்பந்தப்பட்டவர்கள் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொண்டால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அறநிலையத்துறை வருவாயை முறைப்படுத்தி நல்ல ஒரு பல்கலைக்கழகத்தில் அனைவருக்குமே உயர்கல்வி அதாவது மருத்துவம் கல்வி சுகாதாரம் என்ற அனைத்து துறைகளிலும் இலவசமாக அளிக்க முடியும். அறநிலையத்துறைக்கு தனியாக வங்கி தொடங்கி திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கு உதவலாம்.
இது போலவே பல்வேறு இடங்களில் அறநிலையத்துறை ஊழல்களை களைவதற்காக தனியாக ஒரு காவல்துறை தலைவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிலிருந்து பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப் பட்டால் மட்டுமே இந்து சமய திருக்கோயில்களின் சொத்துக்களைக் காப்பாற்ற முடியும்
அது மட்டுமல்லாமல் இந்து அறநிலையத் துறையை ஊழலை ஒழிப்பதற்காக அனைத்து பணியாளர்களும் அலுவலக உதவியாளர்கள் அடிப்படை உதவி ஆணையர்கள் வரை அனைவரும் தங்களின் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இது மட்டுமே ஊழல்களை ஒழிக்க போதாது. ஒவ்வொரு கோவில்களிலும் நிறைய போலி சீட்டுகள் புழங்குகின்றன. இதனால் நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு மோசடி செய்யப்படுகிறது. இதை தடுப்பதற்காக திருக்கோயில்களில் எந்தெந்த இடத்தில் செலவினம் செய்யப்படுகிறது என்று நகல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே இந்த ஊழலை ஒழிக்க முடியும்.
இது சம்பந்தமாக தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். கோயில்களின் சொத்துக்களை மீட்பதற்கான அதிகாரங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரையும் தமிழகத்தில் பட்டியலில் உள்ள 5 லட்சம் ஏக்கர் நிலங்களையும் முறையாக பேணி பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்க முடியும்.
சம்பந்தப்பட்டவர்களின் அலட்சியத்தினால் தான் இந்த சொத்துக்களை மீட்க முடியாத நிலைக்கு காரணம். இந்து அறநிலையத் துறைக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அதிகாரங்கள் உள்ளது. ஆனால் இந்து அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாதது தான் இதற்கு காரணம் என திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.