40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: ரூ.55 கோடி ரொக்கம், ஆவணங்கள் சிக்கின; ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்
ஹவாலா பணம் பரிமாற்றம் தொடர் பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.54 கோடியே 60 லட்சம் பணம், ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த மாதம் 30-ம் தேதி மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் திடீரென சோதனை நடத்தினர்.
இதில், 7 கிலோ தங்கம், ரூ.11 கோடியே 16 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை பதுக்கி வைத்திருந்ததாக ஓட்டலில் தங்கியிருந்த 2 வெளிநாட்டினர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மத்திய வருவாய் பிரிவினர் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து சென்னை தி.நகரில் வசிக்கும் ஸ்ரீநிவாச ரெட்டி என்பவரின் வீடு, அவரது நிறுவனம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அவர்களின் அலுவலகங்கள் என 40 இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
பூந்தமல்லியில் உள்ள மதுபான ஆலையிலும் சோதனை நடத்தப் பட்டது.
சோதனை குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறும் போது, “கடந்த 7-ம் தேதி தொடங் கப்பட்ட சோதனை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
சோதனை யில் இதுவரை ரூ.54 கோடியே 60 லட்சம் பணம், ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பல ஆவணங்களையும் கைப்பற்றி இருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வரு கிறது.
விசாரணையில் கிடைக்கும் தகவல்களை வைத்தே, ஹவாலா பண மோசடிக்கும் சென்னை தொழில் அதிபருக்கும் உள்ள தொடர்பு குறித்து கூறமுடியும்” என்று கூறினர்.