பாஜக.,வில் இணைந்த ரசிகர்களுக்கும், கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; நாங்கள் எப்போதும் அஜித் பக்கம்தான் என திருப்பூரில் கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தனர்.
திருப்பூரில் கடந்த 20 ஆம் தேதி பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் பாஜக.,வில் இணையும் விழா நடைபெற்றது . இதில் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை கலந்துகொண்டார். இதில் அஜித் ரசிகர்கள் பெரும்பாலும் பாஜகவில் இணைந்ததாகவும், அஜித்தை புகழ்ந்தும் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியிருந்தார்.
இந்நிகழ்வு அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து நடிகர் அஜித், தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும் என் அரசியல் நிலைப்பாட்டை ரசிகர்களுடம் திணிப்பதில்லை எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் திருப்பூரில் கலைக்கப்பட்டபோது அஜித் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் .
அப்போது பாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர் மன்றத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை! நாங்கள் எப்போதும் அஜித் அவர்களின் வழியில் நடந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு சில அரசியல் கட்சிகள் அஜித் மன்றத்தினர் இணைந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் நாங்கள் யாரும் அவ்வாறு செல்லவில்லை.
திருப்பூர் மாவட்ட தலைமையின் சார்பில் யாரும் இணைய வில்லை. அஜித்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எப்போதும் செயல்பட மாட்டோம். எங்களுக்கு அரசியல் தேவையில்லை! எப்போதும் நாங்கள் தல வழியில்தான் எனவும், அஜித் ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டிருந்தாலும் எப்போதும் அஜித்தின் ரசிகர்களாக ஒன்றிணைந்து உள்ளோம் எனவும் தெரிவித்தனர்.