சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது தொடர்பாக, அதிமுக மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருகிறது என்று கூறியுள்ள தேமுதிக துணைச் செயலர் சுதிஷ், கேப்டன் திரும்பி வந்ததும் இறுதிக் கட்டம் உறுதி செய்யப் படும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, திமுக., தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக., தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப் பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக., இடம் பெறும் சூழ்நிலையில், தேமுதிக., பாமக ஆகிய கட்சிகளுடன் அதிமுக., பாஜக., தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்தக் கட்சிகளும் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் போது, அது வலிமையான கூட்டணியாக அமையும் என்பதுடன், அவரவர்க்கான போட்டியிடும் தொகுதிகளும் குறையக் கூடும்.
அதிமுக., கூட்டணி குறித்து பரபரப்பாகப் பேசப் பட்டு வரும் நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தேமுதிக., துணைச் செயலர் சுதிஷ். அப்போது அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். இம் மாத இறுதியில் சிகிச்சை முடிந்தது சென்னை திரும்புகிறார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் கூட்டணி குறித்து நட்பின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மாநிலக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதுதான் இப்போதும் எங்கள் கோரிக்கை. இருப்பினும், விஜயகாந்த் வந்த பின் கூட்டணி குறித்து உறுதி செய்வோம். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றி பெறும் என்றார்.
எனவே அதிமுக., பாஜக.,வுடன் பேச்சு நடத்தி வருவதை சுதிஷ் உறுதி செய்துள்ள போதும், தங்களுக்கும் 14 தொகுதிகள் கேட்கப் பட்டுள்ளதாகக் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.