செங்கோட்டை நீதிமன்றத்தில் தொடுதிரை கணினி சேவையை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்.
செங்கோட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தொடு திரை கணினி சேவை தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கின் விவரங்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் கணினி தொடு திரை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா செங்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ராஜசேகர் கலந்து கொண்டு தொடு திரை கணினி சேவையை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் வழக்குகள், விசாரணை தேதி, வழக்கின் நிலை, புகார்தாரர் பெயர், குற்றம் சாட்டப்பட்டவர் விவரங்கள் ஆகியவற்றை கணினி தொடு திரை மூலம் அறிந்து கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் தென்காசி முதன்மை சார்பு நீதிபதி நாகராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் லிங்கம், அரசு வழக்குரைஞர் பரணிதரண், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் முத்துக்குமாரசாமி, செயலர் அருண், பொருளாளர் மூர்த்தி, இணை செயலர் கார்த்திகை ராஜன், செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், வழக்குரைஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆதி பாலசுப்பிரமணியன், முத்துராமகிருஷ்ணவேல், சக்திவேல், மாரிக்குட்டி, பழனிக்குமார், சாமி, நல்லையா, சுடலைக்குமார், தங்கராஜ், முகமது சிராஜ், ஆசாத், பாத்திமா, கோபிநாத், ராஜாராம் உள்ளிட்ட நீதிமன்ற பணியாளர்கள், செங்கோட்டை அரசு பெண்கள் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.