மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் நரேந்திர மோடி. அப்போது ஜல்பைகுரிக்கு வாருங்கள்! எவ்வளவு பெரிய ஆதரவை மக்கள் பாஜக.,வுக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று பாருங்கள் என்று பெருமிதம் பொங்கக் கூறினார்.
மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி.யில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கணக்கிலங்காத மக்கள் வெள்ளம் அலைமோதியது. அந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, மா, மாதீ, மானுஷ் என்றெல்லாம் சொல்லி, இடதுசாரிகளை அகற்றி விட்டு வங்கத்தில் ஆட்சியில் அமர்ந்தவர்கள் அதே வன்முறைக் கலாசாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் வங்க மண்ணை அவதூறு செய்கிறார்கள்! என்று பேசினார்.
சாரதா சிட் ஃபண்ட் மோசடி விசாரணையை மாநில அரசு சரியாகக் கையாளாமல் சிபிஐ கையிலெடுக்க நேர்ந்தது.! இதை திசை திருப்ப முயன்ற மம்தாவின் தர்ணா அரசியலை சரமாரியாக விட்டு விளாசினார் மோடி.
மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தி, மம்தாவினால் மக்களிடம் தங்கள் செல்வாக்கை இழந்து போன இடதுசாரிகள் இப்போது, மோடி எதிர்ப்பு நெருப்பில் மம்தாவுடன் சேர்ந்து குளிர் காயும் எண்ணத்துடன் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கே மீண்டும் மக்களின் செல்வாக்கு குறைந்து போனது.
மேலும், சாரதா சிட்ஃபண்டில் ஏமாந்துபோய் இருக்கும் லட்சக் கணக்கான மக்களின் பண இழப்பு அவர்களை இரு தரப்பின் மீதும் கடும் கோபத்தை வரவைத்துள்ளது. அதனை இந்த ஜல்பைகுரி கூட்டம் வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, ஜல்பைகுரி பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இங்கே இடதுசாரிகள் ஒரு காலத்தில் கோலொச்சிக் கொண்டிருந்தனர். அவர்களின் கோட்டை மம்தாவினால் ஒரு காலத்தில் தகர்ந்தது. இந்நிலையில், இன்று மோடிக்காகக் கூடிய கூட்டம் கடல் அலைபோல் திரண்டு ஆதரவு அளித்துள்ளது. இதனை பெருமை பொங்கக் குறிப்பிட்டுள்ளார் மோடி.
இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, வங்கத்தில் வன்முறை தலை விரித்தாடுகிறது, சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. வளர்ச்சிப் பணிகளே எங்கள் நோக்கம். இங்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் நிதி முறையாக செலவிடப் படவில்லை.
மேற்கு வங்கத்தில் வன்முறை கலாசாரத்தைக் கையிலெடுத்து வந்திருக்கிறார்கள் ஆளும் தரப்பினர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் 2வது பாகம்தான்.
சாரதா சிட்பண்ட் மூலம் மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். மம்தா சிபிஐ விசாரணையை சந்திக்காமல் அச்சப்படுவது ஏன்? மம்தா பாஜக., தலைவர்களின் ஹெலிகாப்டர்கள் இறங்க விடாமல் தடுக்கிறார். மம்தா மிரட்டலுக்கு பாஜக, தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள்.
மம்தா இப்போது, தில்லிக்கு சென்று ஆட்சி நடத்த ஆசைப்படுகிறார். ஊழல் செய்தவர்கள் எவரும் தப்பிக்க முடியாது. ஊழல் புரிந்தவர்கள்தான் மோடியைக் கண்டு அஞ்சுகின்றனர்.
முத்தலாக் விவகாரத்தில் காங்கிரசின் உண்மையான முகம் வெளிப்படையாக தெரிந்துவிட்டது. முத்தலாக் தடைச் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு நேரும் பாதிப்பை தடுக்க முடியும். ஆனால் இந்தச் சட்டத்தை காங்கிரஸ் திரும்பப் பெற நினைக்கிறது. எந்த தியாகம் செய்தும் இந்தச் சட்டத்தை காப்போம் என்று பேசினார் மோடி.