காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு ஐ.நா.வுக்கு இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, அவரது செயல்பாட்டுக்கு தடை விதிக்கும்படி ஐ.நா. சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மசூத் அசாருக்கு முழு சுதந்திரம் அளித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதத் தேவையான உதவிகளை பாகிஸ்தான் செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்த அறிக்கையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான நட்புறவின் அடிப்படையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தொடர்ந்து ஐ.நா.வில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது சீனா!
தொடந்து சீனாவிடம் சொல்லிப் பார்த்துவிட்ட நிலையில், கடந்த 2018ல் நடைபெற்ற வூஹான் உச்சிமாநாட்டுக்குப் பின்னர் இந்தியா மசூத் அசார் குறித்த விவகாரத்தை சீனாவுடன் எழுப்பவில்லை!
இந்தக் காரணங்களாலேயே ஐ.நா.வில் மசூத் அசார் குறித்து இதுவரை இந்தியா எழுப்பிய கோரிக்கைகள் கவனிக்கப்படாமலேயே போயிருக்கிறது.