இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று கூறினார். #Abinandhan #Abinanthan
ஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானை வலியுறுத்தின. அதேபோல் நிபந்தனைகள் ஏதுமின்றி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் இந்தியாவும் வலியுறுத்தியது.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை; உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பவே பாகிஸ்தானிடம் வலியுறுத்தினோம்; மேலும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய வீரர் அபிநந்தனை நாளை விடுவிக்க இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
அவர் இது குறித்து இன்று கூறுகையில் “அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். கர்தார்பூர் எல்லையை நாங்கள் திறந்தும், இந்தியாவிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
புல்வாமா தாக்குதல் நடந்த 30 நிமிடத்தில் எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்தியா ஏதேனும் தாக்குதல் தொடுத்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என முன்பே நான் சொல்லியிருந்தேன்.
நல்லெண்ண அடிப்படையில் நாளை இந்திய விமானியை விடுவிக்கிறோம். பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும், பாகிஸ்தான் பேச தயாராகவே இருக்கிறது. புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவுடன் பேச நாங்கள் தயாராகவே இருந்தோம் என்று கூறினார் இம்ரான் கான்.