மதிமுக.,வுக்கு மக்களவைத் தொகுதி 1, மாநிலங்களவை இடம் 1 என இரு தொகுதிகள் ஒதுக்க திமுக., சம்மதித்ததாக தகவல் வெளியானது.
ம.தி.மு.க.வின் உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று முற்பகல் நடைபெற்ற நிலையில் மதிமுக.,வினர் 3 இடங்கள் கேளுங்கள் என்று வைகோவிடம் வலியுறுத்தியுள்ளனர். அதற்குக் கீழ் கொடுத்தால் சம்மதிக்காதீர்கள் என்றும் வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால், தி.மு.க. தரப்பில் 1 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க அறிவாலயம் புறப்பட்டுச் சென்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!
முன்னதாக, வைகோ 3 தொகுதிகள் கேட்டு வருவதாகவும், அதனை கொடுக்க திமுக தலைமை மறுத்து வந்ததாகவும் கூறப்பட்டது. திமுக கூட்டணியில் மதிமுக சேருவதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
நேற்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அண்ணா அறிவாலயம் வந்த வைகோ, பேச்சு வார்த்தை நடத்தாமலேயே கிளம்பிச் சென்றார்.
இதனிடையே இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதில் மாநிலங்களவை உறுப்பினராக வைகோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு தருவதாக வைகோ அறிவித்துள்ளதாகக் கூறப் படுகிறது.