நாலே சீட்டுதான்… நாளையோட கடைசி.. வந்தா வாங்க வராட்டி போங்க… இனி இந்தப் படம் ஓடாது! என்று தேமுதிகவுக்கு அதிமுக கெடு விதித்திருப்பதாகக் கூறப் படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கு எல்லா கட்சிகளுமே முன்னேற்பாட்டுடன் களம் இறங்கி விட்டன. திமுக.,வையும் ஸ்டாலினையும் இனி வேறு எவரும் திட்டித் தீர்க்க ஒன்றுமில்லை என்பது போல் வசவு மழை பொழிந்துவந்த வைகோ கூட திடீர் கூட்டணி வைத்து கைகோத்தார்.
ஆளும் அதிமுக.,வை எதிர்த்து அரசியல் செய்து வந்த பாமக., திடீரென கைகோத்துக் கொண்டது. இப்படி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த அரசியல் களனில், தேமுதிக., வழக்கம் போல் மெத்தனமாக களம் இறங்கியது.
தேமுதிக., தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவால் வெளிநாட்டு சிகிச்சை முடிந்து தாமதமாகத்தான் வந்தார். அதற்குள் இங்கே கூட்டணிப் பேச்சுகள் நடந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் வழக்கம் போல், தேமுதிக., இரு பெரிய திராவிடக் கட்சிகளான திமுக., அதிமுக., இரண்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தி.. நாளைக் கடத்தியது. தேமுதிக.,வுக்காக காத்திருக்க முடியாது, காத்திருந்தால் மற்ற கட்சிகளையும் இழப்போம் என்று கருதி கூட்டணியை சுருக்கென முடித்துக் கொண்டது திமுக.,
ஆனால், அதிமுக., இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறது. தேமுதிக.,என்ன சொல்லப் போகிறது என்று! நிலைமையைப் புரிந்து கொண்டு தேமுதிக., ஒரு முடிவு எடுக்காவிட்டால், அதிமுக., கூட்டணியிலும் அம்பேல்தான் என்கின்றனர் அதிமுக.,வினர்.
இந்நிலையில், “இதுக்கு மேல முடியாது.. நாளைக்குதான் கடைசி… வந்தா வாங்க.. வராட்டி போங்க” என்ற ரீதியில் கூட்டணி சமாச்சாரத்தில் தேமுதிகவுக்கு அதிமுக கெடு விதித்துள்ளதாகக் கூறப் படுகிறது. ஏற்கெனவே நேற்று செய்தியாளர் சந்திப்பில், இரு நாட்களுக்குள் முடிவு அறிவிப்போம் என்று பிரேமலதா கூறியுள்ளார். எனவே, நாளைக்குள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்!