நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்த இரண்டாம் கட்ட தேர்தல் நாளில், தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப். 18 அன்று, மதுரை மட்டுமல்ல… நெல்லையிலும் அன்று திருவிழாதான் என்கின்றனர் நெல்லை வாசிகள்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நேற்று தேர்தல் தேதிகளை அறிவித்தார். இதில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தமிழகத்தில், ஏப். 18 ஆம் தேதி சித்திரா பௌர்ணமி சிறப்பு தினம்! அது தமிழகத்தில் உள்ள ஆன்மிகப் பெருமக்களால் பெரிதும் கொண்டாடப் படுகிறது. அன்றைய நாளில் மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.
லட்சக் கணக்கில் பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதால், அன்றைய தினம் வாக்குப்பதிவு மந்தமாகவே இருக்கும் என்பது கணிப்பு.
இதனால், பொதுமக்களிடம் இருந்து அரசியல் கட்சிகளிடம் இருந்தும் பெற்ற புகார்களை அடுத்து, தேர்தல் நாளில் திருவிழா வருவதால், இது குறித்து முறையான முன்கூட்டியேயான தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரியான நடராஜன் அளித்தாரா என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கேட்டிருக்கிறார்.
தேர்தல் நாள் இது என்று தெரியாத நிலையில், இருப்பினும் மதுரை சித்திரைத் திருவிழா வரும் நாள் என்பதால் தேர்தல் வாக்குப் பதிவு பாதிக்கும், பாதுகாப்புக்கு போலீஸார் பணி அமர்த்தப்பட வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியேயான முன்னெச்சரிக்கைத் தகவல்களை அவர் அளித்தாரா என்பது குறித்து கேட்டிருக்கிறார் சத்யபிரதா சாஹூ.
இந்நிலையில், மதுரையில் மட்டும் அல்ல, நெல்லை உள்ளிட்ட தமிழக தலங்களில் அன்றைய தினம் திருவிழா கொண்டாட்டம்தான் என்கின்றனர் பொதுமக்கள். மதுரை அளவுக்கு இல்லாவிட்டாலும், பல பேர் பக்கத்து ஊர்களில் இருந்து திரண்டு வருவார்களே… அன்று அவரவர் மாவட்டங்களில் ஓட்டுப் பதிவு எப்படி இருக்கும் பாதிப்பு இருக்குமா என்று அறிக்கை ஏதும் கேட்டார்களா அல்லது ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து கொடுத்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், கடையம், கல்லிடைக்குறிச்சி, பாப்பான்குளம், என எல்லா தலங்களிலும் சித்திரா பௌர்ணமி விழா நடைபெறுகிறது.. ஏப். 18 இரவு ஏப். 19 காலை சித்ரா பௌர்ணமி என்பதால் பலரும் தங்கள் ஊர்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்வார்கள்! இது நிச்சயமாக வாக்குப் பதிவில் சரிவை ஏற்படுத்தும்.
வாக்குப் பதிவு நாளில் தேர்த் திருவிழாவும் மறுநாள் பௌர்ணமி நாளில் ஆராட்டு உத்ஸவங்களும் நடைபெறும் என்கின்றனர் நெல்லை வாழ் பெருமக்கள்.
இதனிடையே, தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் விடுமுறை என வந்துவிடுவதால், அதாவது முந்தைய புதன், வாக்குப் பதிவு நாளான வியாழன், புனித வெள்ளி, சனி, ஞாயிறு என வந்துவிடுவதால், அதுவும் கூட வாக்குப் பதிவை பாதிக்கும் என்கின்றனர்.
எனவே தேர்தல் நாளை அடுத்த கட்டமாகவோ, அல்லது வேறு நாளிலோ நடத்துவது நல்லது என்ற குரல் தமிழகத்தில் எழுந்துள்ளது.