மதுரையில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால், அந்த நாளில் மதுரையில் மிகவும் புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடை பெறுகிறது.
ஏப்ரல் 18-ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டமும், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கின்றன. அந்த நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் திருவிழாவில் தான் இருப்பார்கள் என்றும், வாக்குப்பதிவு பாதிக்கப் படும் என்றும் கூறப்பட்டது.
அந்த நாளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வருவது, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகும் எனக்கூறி அரசியல் கட்சித்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏப்ரல் 18 ஆம் தேதி மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.