தேர்தல் அறிக்கை என்றால் அதில் இலவசங்கள் அறிவிப்புகள் இல்லாமல் இருக்காது. இலவச அறிவிப்புகளுக்கு அடித்தளம் இட்டதே தமிழகம்தான் என்று சொல்லலாம். தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல்களில் கடந்த காலங்களில் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் மானாவாரியாக அள்ளி விடப் பட்டிருக்கும்.
இலவச அறிவிப்புகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் இடப்பட்டதும் தனிக்கதை. இந்நிலையில், இது நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் தேர்தல் என்பதால், திமுக., அதிமுக., உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் இலவச அறிவிப்புகளுக்கு பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது, அதற்கான நிதி ஆதாரம் என்ன என்பது பற்றி எல்லாம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியிருக்கிறார். தேர்தல் செலவினங்கள் பார்வையிடுதல் குறித்த தகவல்களை கூறிய அவர், ஒரு மக்களவை தொகுதிக்கு 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை பட்டியலையும் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
அதன்படி, மட்டன் பிரியாணி ரூ.200, சிக்கன் பிரியாணி ரூ.180 காலை உணவிற்கு ரூ.100, தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.20, தொப்பி, பனியன் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலை கணக்கீடு குறித்து பட்டியலை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
அந்தப் பட்டியல்…
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில்…
தற்போது நிலவி வரும் கடுமையான கோடை வெயில் நேரத்தில், பிற்பகலிலும் பகல் நேரத்திலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறுவதால் தங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக சில அமைப்புகளிடம் இருந்தும், குடிமக்கள் குழுக்களிடம் இருந்தும் முறையீடுகள் வந்துள்ளன.
இது போன்ற கூட்டங்களில் கடந்த காலங்களில் வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்திருப்பதும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எல்லா அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், கோடை காலத்தில் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்களை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நிழற் கூரை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை இருக்க வேண்டும். அவ்வாறு செய்து கொடுத்தால் தான் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும்போது யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
எனவே மேற்கண்ட ஆலோசனைகளை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அனைவரும் பின்பற்றி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் .. என்று தெரிவித்துள்ளது.