மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டு, பணியாளர்கள் 3 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அட்டாக் பாண்டி உட்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
தினகரன் நாளிதழில் ஒரு விவகாரமான கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. திமுக., வாரிசுச் சண்டை கோலொச்சிய நேரம். கருணாநிதிக்குப் பின்னர் திமுக.,வில் அடுத்த வாரிசு யார் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. அதில், 70 சதவீதம் பேர் ஸ்டாலின் வர விரும்புவதாகக் கூறியுள்ளனர் என்று முடிவுகள் பிரசுரிக்கப் பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த மதுரையில் இருந்த அழகிரி தரப்பினர் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தியதுடன், கலவரத்திலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, மதுரை தினகரன் அலுவலகத்தின் மீது ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி அலுவலகத்தையே தீயிட்டு கொளுத்தியது. இதில், அலுவலகத்தில் இருந்த கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் என மூன்று பணியாளர்கள் அலுவலகத்தினுள்ளேயே உயிரிழந்தனர்.
இது குறித்த சிபிஐ.,யின் விசாரணையைத் தொடர்ந்து, வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிபிஐ., மேல் முறையீடு செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, முன்னாள் திமுக தொண்டர் அணி அமைப்பாளர் அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.