‘கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை நயன்தாரா குறித்து திமுக.,வைச் சேர்ந்த நடிகர் ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்து பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். எதிர்ப்பு அதிகரித்ததால், திடீரென விழித்துக் கொண்ட திமுக., ராதாரவியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தது.
இந்நிலையில், ராதாரவியிடம் இந்தச் சர்ச்சைகள் குறித்தும் பின்னணி குறித்தும் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியவை…
நாங்கள் எல்லாம் ஒரே சினிமா ஜாதிக்காரர்கள். மனதில் பட்டதைச் சொல்றவன் தான். ஆனால், இந்த விஷயத்தில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று நான் பேசவில்லை.
இதற்காக நயன்தாரா மிகவும் வருத்தப்பட்டார் என்று சொன்னார்கள். எனவே நானும் வருத்தப்படுகிறேன். நயன்தாராவை நேரில் பார்க்கும் போது எனது வருத்தத்தை பதிவு செய்வேன். அவரிடம் நான் உங்களைப் பற்றி பேசவில்லை என்பதை எடுத்துரைத்து நிரூபிப்பேன்.
நான் பேசியதில் தவறில்லை. யாரையும் புண்படுத்திப் பேசமாட்டேன். மனதில் விஷமத் தன்மையுடன் பேசியதில்லை.
எனக்கும் நயன்தாராவுக்கும் சம்பந்தமே கிடையாது. இருப்பினும் இருவருமே ஒரே ஜாதி. சினிமா ஜாதி.
இந்த விஷயத்தில் திமுக இயக்கத்துக்கு குந்தகம் விளைவித்தது மாதிரி இருந்தால், நானே கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன். என்னால் கட்சிக்கு அவப்பெயர் வேண்டாம்..,. என்றார் ராதாரவி.