வேட்புமனுவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கையெழுத்திட தடை விதிக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்பாளர்களின் வேட்புமனுவில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட தடை விதிக்க கோரியும் அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இருவரும் கையெழுத்திட தடை விதிக்க மறுத்ததுடன் மனுவையும் தள்ளுபடி செய்தது.
குறிப்பாக, அதிமுக., சார்பில் தாக்கலாகும் வேட்பு மனுவில் அதிமுகவின் சின்னத்தை வேட்பாளருக்கு ஒதுக்க ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் கையெழுத்திட தடை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இது தொடர்பாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவில், தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில், பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும் என்பதால், ஓபிஎஸ்., ஈபிஎஸ்., கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனல், அதிமுகவின் விதிகள் திருத்தத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட பிறகு, உட்கட்சி விவகாரங்களில் தலையிட, வேறு யாருக்கும் உரிமையில்லை என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், வேட்புமனுவில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கையெழுத்திட தடை விதிக்க முடியாது என்று கூறி, கே.சி.பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.