நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி கண்டு களம் இறங்கியுள்ளது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி! அக் கட்சிக்கு அதிமுக., கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.
இந்தத் தொகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக என்.ஆர்.நடராஜனை அறிவித்தார் ஜி.கே.வாசன். இந்தத் தொகுதியில் போட்டியிட தனது கட்சியின் பழைய சின்னமான சைக்கிள் சின்னத்தைக் கோரியிருந்தார் ஜி.கே.வாசன். முதலில் அக்கட்சிக்கு சைக்கிள் சின்னத்தைக் கொடுத்த தேர்தல் ஆணையம், குறைந்தது இரண்டு தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
ஆனால் தஞ்சை தொகுதியில் மட்டும் த.மா.கா. போட்டியிடுவதால், நீதிமன்றத்தில் அவருக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்க மறுப்பு தெரிவித்தது தேர்தல் ஆணையம்.
இதை அடுத்து அக்கட்சிக்கு இன்று சின்னம் ஒதுக்கப் பட்டது. அதில், த.மா.கா., வேட்பாளர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.
ஒரு தொகுதியில் போட்டியிட சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுப்பு தெரிவிக்கப் பட்டதால், இன்று அக்கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு த.மா.கா. வேட்பாளரை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார்.
இருப்பினும், ஆட்டோ சின்னத்துக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ஜி.கே.வாசன், அவ இது குறித்துக் கூறிய போது, தமிழ் மாநில காங்கிரசுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை வெற்றிச் சின்னமாகவே கருதுகிறேன். ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாகனம் ஆட்டோ தான்… என்று கூறினார்.