தொகுதியில் தனது மகனின் வெற்றி வாய்ப்பை தடுக்கவே தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்று, தொகுதி நிர்வாகிகளுக்கு போட்டி வைத்து முதலிடம் பிடிக்கும் தொகுதிக்கு ரூ.50 லட்சம் தருவதாகச் சொன்ன திமுக பொருளாளர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் கூறினார்.
வேலூரில் உள்ள துரைமுருகன் வீட்டில் பெரும் போராட்டங்கள், வாக்குவாதங் களுக்குப் பின்னர், இன்று அதிகாலை 3 மணி அளவில் தொடங்கி, இன்று காலை 8.30 வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, ஆந்திரா சித்தூர் செல்லும் சாலையில் உள்ள துரைமுருகன் மகன் கதிரானந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி மற்றும் வேலூர் பகுதி திமுக., வின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
இதை அடுத்து, இந்த சோதனை குறித்து வேலூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், எனக்கே பூசாண்டி காட்டுகிறீர்களா?! சோதனை என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். வேலூர் தொகுதியில் போட்டியிடும் எனது மகன் கதிரானந்தின் வெற்றியை திசை திருப்பவே இந்த சோதனை நடைபெற்றுள்ளது. எங்களை தேர்தலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல், மத்திய மாநில அரசுகள் வருமான வரித்துறையை வைத்து முதுகில் குத்துகின்றனர்.
பரபரப்பாக அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில் சோதனை நடத்துவதற்கான காலநேரம் இது இல்லை என்று கூறினார் துரைமுருகன்!
முன்னதாக, தனது மகனுக்கு அதிக பட்ச வாக்குகளைப் பெற்றுத் தரும் தொகுதி பொறுப்பாளருக்கு ரூ. 50 லட்சம் தனது சொந்த நிதியில் இருந்து எடுத்து பரிசளிப்பதாகக் கூறியிருந்தார் துரை முருகன்..