அதிமுக.,வின் நாலாந்தர பேச்சாளரை விட கேவலமாகப் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி என்று குற்றம் சாட்டியுள்ளார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர், திருச்சி காங். வேட்பாளர் திருநாவுக்கரசை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர்…
நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்லக்கூடியவர்கள் அல்ல, நாங்கள் எப்போதும் மக்களோடு, மக்களாக இருப்பவர்கள் ~ என்றார்.
திருச்சியில் திமுகவை பொறுத்தவரை போட்டிக்கு நாள் குறித்தாலே, அது வெற்றிக்கு நாள் குறித்தது போலத்தான் என்று பேசினார்
தொடர்ந்து, மு.க.ஸ்டாலினை பற்றி நான் பேசினால் அவரது காது ஜவ்வு கிழிந்து விடும் என்ற முதல்வரின் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் 4-ம் தர பேச்சாளர்களை விட மிக கேவலமாக பேசுகிறார் முதல்வராக இருக்கும் எடப்பாடி.பழனிசாமி என்றார்.
மாண்புமிகு, மதிப்புமிகு, முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி அவர்களே கொஞ்சம் பொறுங்கள். தேர்தல் முடிவுக்கு பின் உங்கள் வாழ்க்கையே கிழிய போகிறது. மத்திய பாஜக ஆட்சியையும், பாஜக ஆட்சிக்கு சேவகனாக இருக்கும் தமிழக ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பும் நாள் வரும் ஏப்-18.
பாஜக, அதிமுக, பாமக கட்சிகளின் தேர்தல் அறிக்கை முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது. காஷ்மீர் விவகாரம், நீட் பிரச்சினை, 7 பேர் விடுதலை விவகாரங்களில் ஆளுக்கொரு நிலைப்பாடு கொண்ட தேர்தல் அறிக்கையாக அதிமுக கூட்டணியின் அறிக்கை உள்ளது.
அதிமுக கூட்டணி கொள்ளையடிக்க அமைந்த கூட்டணி, திமுக கூட்டணி கொள்கைக்காக அமைந்த கூட்டணி. கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக எம்.பிக்கள் தமிழகத்திற்கு செய்த சாதனைகளை பட்டியலிட தயாரா ? என்று திருச்சி காங்.வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.