குடிநீர் பஞ்சம் தவிர்க்க வேண்டி ஆலயங்களில் பர்ஜன்ய சாந்தி வருண ஜபமும், மழை வேண்டல் பதிகமும், அமிர்த வர்ஷினி, மேக ராக குறிஞ்சியும் இசைத்து பொது மக்களுக்காக இறைவனிடம் வேண்டும்படி எல்லாக் கோவில்களுக்கும் அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பியது.
இதை திக. வீரமணி வழக்கம் போல கிண்டல் செய்து… “இதனால் எல்லாம் மழை வந்து விடுமா? அதுவும் இந்த கோடையில்….!” என்று அறிக்கை வெளியிட்டார்.
ஆறறிவு படைத்தும்… ஆன்மீகம் நாடாத… அறிவீலிகளுக்கு தக்க பாடம் புகட்டும்படி அறவழி வாழும் அன்பர்கள் அம்மையப்பரிடம் வேண்டினர். பல கோவில்களில் செய்து வருவதைப் போல மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலும் மேற்படி ஐபங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் மே 7ம் தேதி மதுரையின் தல அடியாரான மங்கயற்கரசியார் குருபூஜையை முன்னிட்டு, அங்கயற்கண்ணி உடனாகிய ஆலவாய் ஈசனுக்கும் திருஞானசம்பந்தர், மங்கயற்கரசியார், நின்றசீர் நெடுமா பாண்டியன், மந்திரி குலச்சிறையார், மும்மையால் உலகாண்ட மூர்த்தி நாயனார் முதலியோருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மழை வேண்டல் பதிகமும் பாடி பண்ணிசை மாலை சூடி வழிபாடு நடைபெற்றது.
மாலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இறையருளால் வருண பகவான் மாரியாய் பொழிந்து… மதுரை மண்ணை குளிர்வித்தார்.
மதுரை மண்ணுக்கு துயர் வரும் காலங்களில் எல்லாம் ஓடி வந்து அருளும் தென்னாடுடைய ஈசன் சொக்கநாதர்… “வீணர்களின் பேச்சுக்களை வகை செய்யாதீர்.. யான் இருக்கிறேன்… மக்களை காக்க!” என்று இறங்கி வந்து அருள் விளையாடல் செய்ததாகவே அவனடியார்கள் உணர்ந்து புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.
இதே போல்… திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை பிரம்ம தீர்த்த குளத்தில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வருண யாகம் செய்தனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் இசை கலைஞர்களால் நாதஸ்வரம், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் உள்ளிட்ட இசை கருவிகளால் மழை வேண்டி இசை ராகங்கள் இசைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து யாக கலசங்களை சிவாச்சாரியார்கள் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் இருந்து சுமந்து வந்து பிரம்ம தீர்த்தத்தில் பூஜைகள் செய்து கலசநீர் பிரம்ம தீர்த்தத்தில் தெளிக்கப்பட்டன.
திருவண்ணாமலையில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை வலுத்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. சிறிது நேரம் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இரவு 9.30 மணி வரை மழை நீடித்தது. இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும் மழை தண்ணீர் தேங்கியது. கிரிவலப்பாதையில் பல இடங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கியுள்ளது. திருவண்ணாமலையில் பெய்த மழையின் காரணமாக பக்தர்கள் பரவசமடைந்தனர்.