மீண்டும் மோடி பிரதமர் ஆவதற்கான சூழல் எழுந்துள்ளது. இன்றைய வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் வெளியான தொடக்கத்தில் இருந்தே பாஜக., கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே.23) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை
நடைபெறுவதை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான
இடைத்தேர்தலும் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது.
இவை அனைத்துக்கும் இன்று காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில், 45 மையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டுவருகின்றன.
கடந்த 2014 தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக., இந்தத் தேர்தலில், பாஜக.,வுக்கு எதிராக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கைகோத்தன. மகா கட்பந்தன் என்று பெயரிடப் பட்ட இந்தக் கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆயினும் காங்கிரஸை கழற்றி விட்டு, அனைத்து 80 தொகுதிகளிலும் இரு கட்சிகளும் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை பாஜக.,வுக்கு சில இடங்கள் குறைந்திருக்கின்றன என்ற போதும், 60 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசமே மீண்டும் பாஜக.,வுக்கு கை கொடுக்கிறது.