துட்டனைக் கண்டால் தூர விலகு என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டு மாநில முதல்வர் தூர விலகிப் போயுள்ள சம்பவம் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.
திமுக., தலைவர் ஸ்டாலினுடன் ஒரே விமானத்தில் பயணிப்பதை ரத்து செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் செய்கை இப்போது சமூகத் தளங்களில் விவாதிக்கப் படுகிறது.
திருச்சி அதிமுக., புறநகர் மாவட்டச் செயலர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல் மகனின் திருமண விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை நேற்று திருச்சி வந்தார். பின்னர், இரவு 8:10க்கு இண்டிகோ விமானத்தில் முதல்வர் சென்னை திரும்ப முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தேர்தலில் ஆதரவளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, திமுக., தலைவர் ஸ்டாலினும் அதே விமானத்தில் சென்னை செல்ல ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தத் தகவல் கிடைத்ததை அடுத்து, இருவரும் ஒரே விமானத்தில் செல்வது குறித்து யோசித்த எடப்பாடி தரப்பு அதிகாரிகளிடம் பேச, அவர்களும் ஸ்டாலினிடம் வேறு விமானத்தில் பயணத்தை மாற்றிக் கொள்ளுமாறு வேண்ட, அதற்கு ஸ்டாலின் தரப்பு முற்றிலுமாக மறுத்து விட்டதாம்.
இதனால், ஸ்டாலினை ஒரே விமானத்தில் செல்லும் போது சந்திக்க விரும்பாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் வழியாக, சேலத்துக்கு காரில் சென்று, தனது சொந்த ஊரான சேலத்தில் இருந்தே இரவு 11 மணி விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டு சென்றுள்ளார்.