காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில், கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருக்கிறார். அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதால், ஆர்வத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து, அத்தி வரதர் பெருமானை தரிசித்து வருகின்றனர்.
அத்தி வரதரை சந்திக்க அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் விஐபி வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். ஆயினும் குடியரசுத் தலைவர் இருந்து தரிசித்த அதே மரியாதையுடன், விவிஐபி வரிசையில் வரிச்சியூர் செல்வம் என்ற ரவுடியும் தரிசனம் செய்த சம்பவம், காஞ்சிபுரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் மீது தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்டை கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய குளறுபடிகளால், பிரதமர் மோடி தாம் மேற்கொள்ளவிருந்த அத்திவரதர் தரிசனத்தை ரத்து செய்ததாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே, வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட ரவுடிகளும் பாஸ் பெற்றது எங்கனம் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திமுக.,வினர் தான் வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் பெற்றுக் கொடுத்தது என்றார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஸ் பெறுவது முறைகேடான வகையில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுபோல பல விஜபி டோனர் பாஸ்களைக் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இலவசமாகப் பெற்று பட்டு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் கல்லா கட்டி வருவதாகக் கூறப் படுகிறது.
காஞ்சிபுரம் என்றாலே, பட்டு வியாபாரிகளின் தலையீடும் அதிகம் இருக்கும். இதற்கென தனி புரோக்கர்கள் அங்கங்கே சுற்றிக் கொண்டிருப்பார்கள். தற்போது லட்சக் கணக்கில் அன்பர்கள் குவிவதால், அவர்களை வளைத்துப் போட காஞ்சிபுரம் பட்டு வணிகர்கள் சில உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
பட்டு வணிகர்கள் தங்களிடம் புடவை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு புடவை வாங்கினால் இரண்டு அத்திவரதர் பாஸ் இலவசம் என்று ஆசை காட்டி, பட்டுப் புடவைகளை விற்றுவருகிறார்கள்’ என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் அத்திவரதரை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தாலும் தரிசனம் செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.