விளைச்சல் குறைவு காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது! இதையடுத்து பொதுமக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விளைச்சல் இல்லை. எனவே வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு 300 லாரிகளில் வந்த காய்கறிகளின் வரத்து தற்போது 200 ஆக குறைந்து விட்டது. இதன் எதிரொலியாக அவற்றின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து வருகிறது.
சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தக்காளி ரூ.40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுபோல், அவரைக்காய் கிலோ 80 ரூபாய், பச்சைப்பட்டாணி ரூ.150, கேரட் ரூ.80, பீட்ரூட் ரூ.40, கத்தரிக்காய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.40 என விற்கப்படுகின்றன
ஒரு மாதத்திற்கு முன் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுபோல் பல்வேறு காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகா, ஆந்திராவில் விளைச்சல் குறைந்துள்ளதும், புரட்டாசி மாதம் முடிந்து நடக்கும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களால் காய்கறிகளின் தேவை அதிகரித்து வருவதும் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது!
அடுத்த ஒரு மாதத்தில் புதிய காய்கறிகள் அறுவடை துவங்கும் என்பதால் விலை படிப்படியாகக் குறையும்; வெங்காய விலை குறைய இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என்று காய்கறி வியாபாரிகள் கூறியுள்ளனர்.