எம்.எஸ்.தோனி என் சகோதரன் என்று மேற்கித்திய தீவுகளின் அணி வீரர் பிராவோ இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேற்கித்திய தீவுகள் அணி ஆல் ரவுண்டரான பிராவோ ஐபிஎல்லில் கலந்துகொண்டு விளையாடியவர். அதுவும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இருந்தபோது, இந்திய கிரிக்கெட் வீரர்களுடன், குறிப்பாக தோனி, ரெய்னா உள்ளிட்டோருடன் மிக நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தவர். அவர்களின் நட்பை சென்னை சூப்பர் கிங்க் அணி ரசிகர்கள் பெரிதும் ரசித்துப் போற்றினர்.
தற்போது, பிராவோவின் இந்த நட்புறவு, மேற்கித்திய தீவுகளில் இந்திய அணி மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்திலும் எதிரொலித்துள்ளது.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனிடையில் பிராவோ, இந்திய கிரிக்கெட் வீரர்களை தன் இல்லத்துக்கு அழைத்தார். அவரது அழைப்பின் பேரில், தோனி, விராட் கோலி, ஷிகர் தவான், புவனேஷ்வர், ரஹானே என ஒரு பட்டாளமே சென்றது. தோனியுடன் அவரது மகள் ஸிவாவும் சென்றார்.
அவர்களது வருகையை ஒட்டி தனது இஸ்டர்கிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டார் பிராவோ. தோனியுடன் பிராவோ, அவரது அம்மா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிராவோ, மற்றொரு தாயிடமிருந்து எனக்குக் கிடைத்த சகோதரன் நேற்றிரவு எனது இல்லத்தில் அவரது அழகான மகளுடன் என்று புகைப்பட விளக்கம் போட்டு பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.