சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!
108 ஞான முத்துக்கள்!
நாட்டு நலனே முக்கியம்!
செய்யுள்:
த்வேஷயோ பி சம்மத: சிஷ்டஸ்த ஸ்யார்தஸ்ய யதௌஷதம் !
த்யாஜ்யோ துஷ்ட: ப்ரியோ ப்ராசீதங்குளீவோரகக்ஷதா !!
— ரகுவம்சம்.
பொருள்:
உடல்நலம் சரியாவதற்காக கசப்பான மருந்தானாலும் எப்படி உட்கொள்ளுவோமோ அதேபோல் எதிரி ஆனாலும் நல்ல குணம் உள்ளவனானால் அவனை ஆதரிக்க வேண்டும். அதேபோல் நமக்குப் பிடித்த மனிதர் தீய குணம் உள்ளவனானால் பாம்புக் கடிக்கு ஆளான கைவிரலை துண்டித்துக் கொள்வது போல அவனை விலக்கி விடவேண்டும்.
விளக்கம்:
மகாகவி காளிதாசர் ரகுவம்சத்தில் திலீப சக்கரவர்த்தியின் குணநலன்களை விவரிக்கையில் கூறிய சுலோகம் இது.
நாட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நற்குணம், நிபுணத்துவம் கொண்டவர்கள் அனைவரையும் ஆதரிக்க வேண்டும். நாட்டு நலனுக்கு கேடு விளைவிப்பவர் நண்பன் ஆனாலும் தண்டிக்க வேண்டும் என்பது கருத்து.
உவமான அணி கொண்டு தன் தனித்துவத்தைக் காட்டும் காளிதாசரின் கவிதை இன்பத்தை இந்த ஸ்லோகத்தில் அனுபவிக்கலாம்.
சமுதாய நலனும் நாட்டு நலனும் முக்கியமானவை. அதற்கு பின்னர்தான் நண்பனும் பகைவனும். அனைவரையும் ஒன்று சேர்த்துச் செல்லும் திறன் தலைமைப் பண்புகளில் ஒன்று. நாட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம், திறமை உள்ளவர்களை சேர்த்துக் கொள்வது சிறந்த தலைவர்களின் இயல்பு.
சாணக்கியர் தன் சாமர்த்தியத்தால் சந்திர குப்தனை சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்வித்தார். பின்னர், பகைவனோடு சேர்ந்து அப்போது வரை சாணக்கியருக்குப் பிரச்சனையாக இருந்த நந்த அரசர்களின் முதலமைச்சரான ராட்சச மந்திரியை சந்திரகுப்தனுக்கு முதலமைச்சராக நியமித்தார். நண்பனாக இல்லாவிட்டாலும் அந்த மனிதரின் சாமர்த்தியம் நாட்டுக்குப் பயன்படும் என்பதால் அவ்விதம் செய்தார்.
பிவி நரசிம்மராவு பிரதமராக இருந்த போது ஐநா சபையில் காஷ்மீர் குறித்து இந்தியாவின் குரலை ஒலிக்கச் செய்வதற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அடல் பிகாரி வாஜ்பேயியை நியமித்தார். அச்செயல் இருவருக்கும் புகழ் சேர்ப்பதாக இருந்தது.
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்