மொசு மொசுக்கைகான வேறுபெயர்கள் :- முசுமுசுக்கை, ஐலேயம், இரு குரங்கின்கை.
மொசு மொசுக்கை கொடி வர்க்கத்தைச் சேர்ந்தது. மழைக்காலம், பனிக்காலத்தில் வேலி ஓரங்களிலும், பற்றைகளிலும் தானாகவே முளைத்துப் பிற மரங்களில் படர்ந்து காணப்படும்.
இதன் தண்டு, இலைகளில் சொணைகள் காணப்படும். தனி இலைகள். வட்ட வடிவம். சொணைகளுண்டு. பூக்கள் மஞ்சள் நிறம், காய் பச்சை நிறம், பழம் சிவப்பு நிறம். தூதுவளங்காய் போன்றது.
இலங்கை மற்றும் இந்தியாவில் அதிகமாக எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. வேளாண் நிலங்களில் அதிகம் வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.
முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் ‘C’ ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:-
மழைக்காலம், பனிக்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, தொய்வு, இருமல் முதலிய நோய்களுக்கு மொசுமொசுக்கை நல்ல மருந்து. இருமல், ஈளை, இரைப்பு, புகையிருமல், மூக்கால் நீர்பாய்தல் (பீனிசம்) என்பன மொசு மொசுக்கையால் தீரும்.
மழை, பனிக்காலங்களில் மூட்டு, தொய்வு, இருமல் போன்றவற்றால் வருந்துபவர்கள் மட்டுமன்றி ஏனையோரும் மொசுமொசுக்கை இலையைத் தமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நன்மை பெறலாம்.
புழுங்கலரிசியை நன்கு ஊறவைத்து அதனுடன் சுத்தப்படுத்திய மொசு மொசுக்கை இலை சிறிதளவு மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு என்பவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
முசுமுசுக்கை தோசை : இந்த மாவைத் தோசைக்கல்லில் சிறிது நெய்தடவி, அடையாகச் சுட்டுச் சாப்பிட்டுவர கோழைக்கட்டு, இருமல், தொய்வு நாக்குச் சுவையின்மை ஆகியவை தீரும். என்று மூலிகை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முசுமுசுக்கை வேர், பசியை அதிகரிக்கும்; நஞ்சை நீக்கும்; சளியை அகற்றும்; வாந்தியை கட்டுப் படுத்தும்; ஆண்மையை அதிகரிக்கும்.
இலை கோழையை அகற்றும்; இருமல், இரைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றை குணமாக்கும்.
- இரைப்பிருமல் குணமாக இலையை நிழலில் காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 120 கிராம் அளவு தூதுவளை இலைத் தூள் 80 கிராம் அளவுடன் ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி அளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட வேண்டும். 100 நாள்கள் வரை இவ்வாறு செய்யலாம்.
- கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக வேண்டும்.
- வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு, அரை தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
முசுமுசுக்கை துவையல்: 3 பிடி இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெய்யில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். ரத்தமும் சுத்தமாகும்.
முசுமுசுக்கையைக் காரக் குழம்பு ரகத்தில் செய்து சுடு சாதத்தில் பிசைந்து ஆவி பறக்கச் சாப்பிட்டால், மூக்கிலிருந்து நீர் வடிவது குறையும்.
இதன் இலைகளோடு மிளகு, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லி இலைகள், புதினா, கறிவேப்பிலை சேர்த்து தொடு உணவைத் தயாரித்துச் சாப்பிட அஜீரணம், வயிற்றுப்பொருமல் தணியும். முசுமுசுக்கை இலை, தூதுவேளை, இஞ்சி, தனியா ஆகியவற்றோடு கூடவே அறுகம்புல்லையும் துணைக்கு அழைத்துத் துவையலாகச் செய்து சாப்பிட, பித்தம் சார்ந்த நோய்கள் அடங்கும்.
முசுமுசுக்கை இலை, கொத்துமல்லிக் கீரை, கொண்டைக் கடலை, சிறிது பெருங்காயம் சேர்த்துத் தயாரிக்கப்படும் முசுமுசுக்கை – கடலைச் சட்னி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவு.
மருந்தாக: குளுக்கோஸ் வளர்ச்சிதையில் சில மாறுதல்களை உண்டாக்கி, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இதன் வேதிப்பொருட்கள் உதவுகின்றன. இதன் இலைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட நானோ நுண்துகள்களுக்கு, கொசுப்புழுக்களை அழிக்கும் வீரியம் அதிக அளவில் இருப்பதாக ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
வயிற்றின் மென்படலத்தில் எந்தவிதக் கிருமித் தொற்றும் தாக்காத வகையில், அதன் நோய் எதிர்க்கும் திறனை முசுமுசுக்கையின் சாரங்கள் அதிகரிக்கின்றன. மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரல் பகுதியில் ஏற்படும் தொற்றுக்களை அழிக்கும் வல்லமை முசுமுசுக்கைக்கு உண்டு.
வீட்டு மருந்தாக: முசுமுசுக்கை இலைப் பொடி, கண்டங்கத்திரிப் பொடி, திப்பிலி, மிளகு ஆகியவற்றைத் தேனில் குழைத்துச் சாப்பிட, இரைப்பிருமல் அகலும். கப நோய்களைத் தடுக்கும் சித்த மருத்துவக் குடிநீர் வகைகளில், முசுமுசுக்கை இலைகளைச் சேர்த்துக்கொள்ள, மருந்தின் வீரியம் அதிகரிக்கும். முசுமுசுக்கை வேர், ஆடாதோடை வேர், கிராம்பு ஆகியவற்றைப் பொடித்து, வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட, சுவாசம் எளிமையாய் நடைபெறும்.
இதையே கஷாயமாக்கிக் கொடுத்தால், உடலில் அதிகரித்த கபமும் பித்தமும் குறையும். முசுமுசுக்கை, கற்பூரவள்ளி, சின்ன வெங்காயம், சீரகம் ஆகிவற்றைச் சேர்த்தரைத்துச் சாப்பிட, உடலுக்கு உடனடியாகப் பலம் கிடைக்கும். வெளுத்த தலைமுடியைக் கருமையாக்கத் தயாரிக்கப்படும் இயற்கை முடிச் சாயங்களில் இதன் இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
முசுமுசுக்கை இலைகளிலிருந்து சாறு பிழிந்து, நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, கப நோய்களுக்குத் தலை முழுகும் எண்ணெய்யாகப் பயன்படுத்தலாம். இறுகிய கோழையை வெளியேற்ற, இதன் வேரைக் கஷாயமாக்கிப் பருகலாம். கோழையகற்றி செய்கையுடைய இதன் இலைகளைக்கொண்டு இருமலின் தீவிரத்தை உடனடியாகக் குறைக்க முடியும்.
முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.
முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.
முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
முசுமுசுக்கை கீரையுடன் வெந்தயம் சேர்த்து உண்டால் உடல் பலம் பெறும்.
10 மி.லி முசுமுசுக்கை சாறு 10 மி.லி நெல்லிச்சாறு இரண்டும் கலந்து குடித்தால் பித்தம் தணியும்.
முசுமுசுக்கை வேர் 100 கிராம், ஆடாதோடை வேர் 75 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை வகைக்கு 10 கிராம், லவங்கம் 2 கிராம் சேர்த்து இடித்து பொடி செய்து 5 அரிசி எடை கறுப்பு வெற்றிலையுடன் உட்க்கொண்டு பால் அருந்தி வர சுவாச உறுப்பை சுத்தமாக்கும். உறைந்த சளி வெளியாகும். நாட்பட்ட இருமல் என்புருக்கி தீரும்.
தினமும் சாப்பிட்டுவர மனநல பாதிப்புகள் சரியாகி உணர்வுகள் கட்டுப்படும் இதனால் முகமும் அமைதியாகி பொலிவாக மாறும் ரத்தம் சுத்தமாகி அதிக ரத்த அழுத்த பாதிப்புகள் விலகி உடல் நலம் மேம்படும்.