நகைச்சுவை அரசர் கிரேசி மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்
திரு.கிரேசி மோகன் அவர்கள் (16 அக்டோபர் 1949 – 10 ஜுன் 2019) தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர்.
இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார். அடிப்படையில் பொறியாளரான இவர் சிறந்த ஆன்மிகவாதியும் தமிழறிஞரும் ஆவர்.
அபூர்வ சகோதரர்கள் திரைப் படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றினார்.
முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவதில் பெயர் பெற்றவர். நாடக ஆசிரியரும், நகைச்சுவை மன்னருமான திரு.கிரேசி மோகன் அவர்களது மறைவு தமிழுக்கும், தமிழகத்திற்கும், நாடக கலைக்கும், திரை உலகத்திற்கும் பேரிழப்பாகும்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை கொண்ட திரு.கிரேசி மோகன் அவர்கள் ஆரம்ப காலகட்டங்களில் மேடை நாடகங்களில் தனது முத்திரையைப் பதித்தார். திரு.S.V.சேகர், திரு.கமலஹாசமன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்.
அவருடைய “சாக்லேட் கிருஷ்ணா” உள்ளிட்ட நாடகங்கள் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் பெரும் சாதனை படைத்தது. அவருடைய நகைச்சுவை வசனங்கள் நடிப்பாற்றல் ஆகியவை பாராட்டுதலுக்கு உரியதாகும்.
நல்ல தேசபக்தியும், இறை பக்தியும் கொண்ட திரு.கிரேசி மோகன் அவர்கள் சிறந்த வைணவராக வாழ்ந்தார்.
பகவான் ரமணரின் பக்தராவார். இந்து சமய ஈடுபாடு கொண்டவர், பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி சாதனை படைத்துள்ளார். தமிழில் வெண்பா எழுதுவதில் புலமை பெற்றிருந்த கிரேஸிமோகன் உடைய வெண்பா ஆற்றல் அளப்பரியது.
அவருடைய வெண்பாக்களின் மூலம் பல அரிய செய்திகளை தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்து மக்கள் கட்சியின் மீது மிகுந்த ஈடுபாடும் ஆதரவும் கொண்டிருந்த திரு.கிரேசி மோகன் அவர்கள் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
என்னை அவரது வீட்டிற்கு அழைத்து ஆசீர்வதித்து தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தினார். தொலைபேசி மூலமும் நேரிலும் அவ்வப்பொழுது என்னோடு இந்து சமயம், பகவத் கீதை, வெண்பா, இந்து சமய பாதுகாப்பு, மோசடி மதமாற்றத்தை தடுத்தல், நாத்திக திராவிட சக்திகளை முறியடித்தல் உள்ளிட்ட பல முக்கிய செய்திகள் குறித்து கலந்து ஆலோசனை செய்பவர்.
திரு.கிரேசி மோகன் அவர்களின் இறப்பு நாடக உலகம் திரை உலகம் தமிழ் கூறும் நல்லுலகம் உலகெங்கிலும் இருக்கக்கூடிய வைணவர்கள் ஆகியோருக்கு பெரும் இழப்பாகும்
அவருடைய பிரிவால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம். அன்னாருடைய நினைவுகள் என்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும்… என்று குறிப்பிட்டுள்ளார்