- Ads -
Home இலக்கியம் ஹீரோக்கள் மதிக்கப்படும் நாள் எந்நாளோ?

ஹீரோக்கள் மதிக்கப்படும் நாள் எந்நாளோ?

Idharkuthane-Aasaipattai-Balakumara1 ராவணன் ராவணன் என்கிறார்களே! அவன் யார்? இப்போதெல்லாம் சினிமாக்களில் வில்லன்கள் விரும்பப் படுகிறார்கள். சமூகத்தின் அனைத்து வித தீச் செயல்கள் நிரம்பப் பெற்ற தீயசக்திகள் ஹீரோக்களாக மக்களால் ஏற்றுக் கொள்ள நிர்பந்தப் படுத்தப் படுகிறார்கள்.. என்ன ரசனையோ தெரியாது! ஊதாரிகள், ஊர் சுற்றிகள், மொடாக் குடியர்கள் எல்லாம், அழகான பெண்கள் விரும்பும் நபர்களின் பட்டியலில் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை உண்மை என்று நம்பி மார்க்கெட்டிங் வித்தையில் மயங்கிப் போன மான்விழியர் பலர்! அண்மையில் வந்த சினிமாப் படங்கள் இதை எடுத்துச் சொல்லும். வருத்தப் படாத வாலிபர் சங்கம், தீயா வேலை செய்யணும் குமாரு, ஆதலால் காதல் செய்வீர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. இப்படி பட்டியல் தொடர்கிறது. இதே போக்கைத்தான் சென்ற நூற்றாண்டில் ஓர் இயக்கம் விதைத்தது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று முழங்கியது அப்படித்தான். சமூகத்தால் தீச் செயல்களுக்கு உதாரணனாகக் காட்டப்பட்ட ராவணன் ஹீரோவான கதை அப்படித்தான். அதற்குக் காரணம், ராமன் என்ற ஆரியன், ராவணன் என்ற திராவிடனை அழித்த நயவஞ்சகக் கதையாம். திராவிடன் என்று குறிப்பிட்டுவிட்டால் மட்டும், மாற்றான் தோட்டத்து மல்லிகை மணம் நுகரலாமா? சென்ற நூற்றாண்டிலேயே இது காரசார விவாதத்தைப் பெற்றுவிட்டது.


1930 வாக்கில் கவியரசர் ரவீந்திர நாத் தாகூர், இலங்கைத் தமிழரான ஆனந்த குமாரசாமியை அமெரிக்காவில் வைத்து சந்தித்தார். அப்போதுதான் தென்னாட்டில் ராவணனை ஹீரோவாக்கிய “பகுத்தறிவு’ இயக்கம் மும்முரமாக வளர்ந்திருந்தது. ஒருநாள் பேச்சுக்கு இடையே ஆனந்த குமாரசாமி, “இந்த இயக்கத்தார் ராவணனைத் தமிழனாக, அதாவது திராவிடனாகக் கருதிப் போற்றி, ராமாயணத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வருகிறார்கள்” என்றார். “என்ன, ராவணனை வால்மீகி எந்த இடத்திலும் திராவிடன் என்று குறிப்பிடவில்லையே!” என்று வியப்பின் உச்சியில் ஆழ்ந்தார் கவியரசர் தாகூர். அதற்கு ஆனந்த குமாரசாமி, “இது அந்தப் “பகுத்தறிவாளர்’ கருத்தே தவிர தமிழர் கருத்தில்லை” என்றார் சிரித்தபடியே! “வால்மீகி ராமாயணத்தின்படி, ராவணன், பிரம்மாவின் மகனான புலஸ்தியனின் பேரன்; சிவபெருமானைத் தன் சாம கானத்தால் மகிழ்வித்தவன்; எனவே வேதியன், பிரம்ம குலத்தவனாய் வேதம் பயின்றிருந்தும் பிறன் மனைவியை விரும்பித் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான், இழிந்த செயல் புரிந்தவனாய் அழிந்தான். ராமனோ வேதியனாக இல்லாவிட்டாலும், ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருந்து ராவணனை வென்றான். எனவே, தீமைக்கும் நன்மைக்கும் நடந்ததுதான் இந்தப் போராட்டம். இதுதான் உண்மை; பகுத்தறிவுக்கும் இயைந்தது” என்றார் கவியரசர் தாகூர். “ஆமாம், இதே கருத்தைத்தான் தமிழ் முனிவர் வள்ளுவரும், “வேதியன் வேதம் பயில மறந்தாலும் பரவாயில்லை, ஒழுக்கத்தைக் கைவிட்டால் இழிந்தவனாகிக் கெடுவான் என்று குறிப்பிட்டிருக்கிறார்” என்று கூறி அந்தக் கருத்துடைய திருக்குறளை எடுத்துச் சொன்னார் ஆனந்த குமாரசாமி. “மிகவும் அருமையானது இந்தச் செய்யுள் கருத்து. பாரத நாடு முழுவதற்கும்…. ஏன் உலகம் முழுவதற்குமே மகான் வள்ளுவரின் இந்தக் கோட்பாடு பொருந்தும்” என்று பாராட்டினார் கவியரசர் தாகூர்.


ஆனந்த குமாரசாமியும், தாகூரும் சந்தித்துப் பேசிய இந்தச் சம்பவம் எனக்குத் தெரிய வந்ததும் ஒரு அதிசயம்தான். ப்ரவாஸி என்ற பத்திரிகையில் வந்த துணுக்குச் செய்தியை ஒரு முறை வங்க மொழிபெயர்ப்பாள நண்பர் ஒருவர் படித்துக் காட்டினார். சுவாரஸ்யமாக இருந்ததால், அப்போது அவரை அதனை மொழிபெயர்த்துத் தரச் சொல்லி மஞ்சரி இதழில் வெளியிட்டேன். இப்போது இது நினைவுக்கு வரக் காரணம், மேற்கண்ட திரைப் படங்களின் கதைப் போக்குதான்! கடந்த சில வாரங்களாக சென்னையில் மாணவர்களின் அடிதடி, ரகளை, கலாட்டாப் போக்குகள் பெரும் வருத்தத்தைத் தருகின்றன. பஸ்களில் அவர்கள் போடும் ஆட்டம் ஏதோ இளமைத் துள்ளல் என்று விட்டுவிட்டு ஒதுங்கிப் போனாலும், கத்தியும், கம்புமாக வன்முறை வெறியாட்டத்தில் அவர்கள் இறங்குவதற்கு ஒரே காரணம், திரைப்படங்களில் காட்டும் சண்டைக் காட்சிகள்தான் என்பது என் எண்ணம். எப்போது ஹீரோக்கள் ஹீரோக்களாக மதிக்கப் படப் போகிறார்களோ? வளரும் சமுதாயத்தின் மீதான கருத்துருவாக்கம்தான், நாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கப் போகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version