IRO என்ற அனைத்துச் சமய மன்றம் என்கிற சொற்தொடர், நம் சிங்கப்பூர் மண்ணின் அடி நாதச் சொற்கள்! பல சமயங்களின் ஒற்றுமையையும், அமைதியையும் மக்களுக்கு உணர்த்தும் தலையாய பணியில் கடந்த 70 ஆண்டுகளாக, (பிரிட்டிஷாரின் காலத்திலிருந்து) செயலாற்றி வரும் நிறுவனம் அனைத்துச் சமய மன்றம் ஆகும்.
அதன் 70வது ஆண்டு நிகழ்வு நேற்று அன்றைய புகழ்பெற்ற ஃபுல்லர்டன் அஞ்சல் நிலைய நவீன கட்டிடத்தில் தற்போது அமைந்திருக்கும் ஃபுல்லர்டன் (செவன் ஸ்டார்) ஒட்டலில் இடம்பெற்றது.
பொங்கி வழிந்த பிரமுகர்கள் கூட்டம்-அத்தனை பேரும் பழம்பெரும் மதங்களைச் சேர்ந்த சிங்கப்பூரின் பாரம்பரியங்கள்!
கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீனர், பௌத்தர், இந்து, சீக்கியர், மற்றும் 10க்கும் மேற்பட்ட மதச் சார்பினர் அனைவரும் ஒன்று திரண்டு, மதத்தால், இனத்தால், மொழியால் சிங்கப்பூரின் ஒன்றுபட்டு வாழும் வாக்குறுதிகளை எடுத்து நாட்டு வணக்கம் செலுத்தினர்.
அமைச்சர் க்ரேஸ் ஃபூ நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இருந்து, சிங்கப்பூருக்குத் தேவையான மத நல்லிக்கணக்கமும், புரிந்துணர்வும் தொடர்ந்து கட்டிக் காக்கப்படுவதன் அவசியத்தை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின் அண்மைய நான்காம் தலைமுறை இளைய அமைச்சரவையில் மூத்த அமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் அமைச்சர் க்ரேஸ் ஃபூவை சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
- ஏ.பி.ராமன், சிங்கப்பூர் (ஏபிஆர்.)